மும்பை : சர்வதேச கிரிக்கெட்டின் 146 ஆண்டு வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். கிரிக்கெட்டில் இதுவரை பல சாதனைகள் படைக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஒரு கிரிக்கெட் வீரர் அதிரடி வீரர் என்று அவர் எவ்வளவு சிக்சர் அடிக்கிறார் என்பதை வைத்து தான் ரசிகர்கள் அப்படி அழைப்பார்கள். சிக்ஸர் அடிக்கும் வீரரை தான் சாதாரண ஒரு கிரிக்கெட் ரசிகருக்கும் பிடிக்கும்.

மாஸ் கமர்சியல் திரைப்படத்தில் ஹீரோவை அடித்தட்டு மக்கள் எப்படி விரும்புவார்களோ, அதே போல் தான் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடிக்கும் வீரர்களுக்கு என தனி மரியாதை இருக்கிறது. அந்த வகையில் தற்போது ரோகித் சர்மா ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி இருக்கிறார். 146 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்.
ரோகித் சர்மா 582 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், 553 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெயில் இரண்டாவது இடத்திலும், 476 சிக்ஸர் உடன் சையது ஆப்ரிடி மூன்றாவது இடத்திலும், 398 சிக்சர்களுடன் மெக்குல்லம் நான்காவது இடத்திலும், 383 சிக்சர்களுடன் குப்தில் ஐந்தாவது இடத்திலும்,359 சிக்ஸர்களுடன் தோனி 6வது இடத்திலும் 352 சிக்ஸர் உடன் ஜெயசூர்யா 7வது இடத்திலும், 346 சிக்சருடன் இயன் மார்கன் எட்டாவது இடத்திலும் உள்ளனர்.
இந்த நிலையில் 500 சிக்ஸருக்கு மேல் இரண்டு வீரர்கள் தான் அடித்திருக்கிறார்கள். அது ரோகித் சர்மாவும், கெயிலும் தான். தற்போது ரோகித் சர்மா இன்னும் 18 சிக்சர்களை அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இதற்கு இன்னும் 18 சிக்சர்கள் தான் தேவை.
இந்த ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறுகிறது. மேலும் பல டெஸ்ட் போட்டிகளும் இந்தியா விளையாடுகிறது. இதனால் ரோகித் சர்மா 18 சிக்சர்களை இந்த ஆண்டில் பாதியிலே அடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த மகத்தான சாதனையை ரோகித் சர்மா எட்ட அதிக வாய்ப்பு இருக்கிறது.