சென்னை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ள சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்னும் 3 நாட்களில் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்களிடையே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. திடீரென 14 மாதங்களுக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் வருகையால் சுப்மன் கில், இஷான் கிஷன், ஜெய்ஸ்வால், ரஜத் பட்டிதார், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோரின் நிலை என்ன என்பதே தெரியாமல் உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியின் நிலை என்னவாக இருந்ததோ, அது அத்தனையும் இவர்கள் 2 பேருக்காக மாற்றி புதிய திட்டங்களை உருவாக்க வேண்டிய நிலைக்கு இந்திய அணி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ருதுராஜ் கெய்க்வாட், பின்னர் ஒருநாள் தொடரின் போது விரலில் காயமடைந்தார். இதன் காரணமாக பயிற்சியிலும் ருதுராஜ் கெய்க்வாட் கலந்து கொள்ளவில்லை.
பின்னர் டெஸ்ட் அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலக்கப்பட்டு, நாடு திரும்பினார். அதன்பின் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட், இதுவரை என்சிஏ பக்கமே செல்லவில்லை. சாதாரணமாக இந்திய வீரர்கள் யார் காயமடைந்தாலும் உடனடியாக என்சிஏ-வுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு, அங்கேயே இருந்து சிகிச்சை பெறுவார்கள்.
வெளியில் சிகிச்சை எடுத்து கொண்டாலும், மீண்டும் ஃபிட்னஸை எட்ட என்சிஏ-வுக்கு நிச்சயம் செல்ல வேண்டும். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் என்சிவுக்கு செல்லாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு உண்மையில் காயம் ஏற்பட்டதா அல்லது அவரை நீக்குவதற்கான காரணமாக சொல்லப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.