மும்பை: இந்திய டி20 அணிக்கு 14 மாதங்களுக்கு பின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கம்பேக் கொடுத்துள்ள நிலையில், சீனியர் வீரரான கேஎல் ராகுல் மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கு முன்பாகவே ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் இருவரும் காயம் காரணமாக விலகியதால், இந்திய அணியின் கேப்டனாக யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

இதனிடையே உலகக்கோப்பை தோல்விக்கு பின் அடுத்ததாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முனைப்புடன் இருந்தனர். அதேபோல் டி20 அணியில் மீண்டும் விளையாட இருவரும் ஆர்வம் காட்டினர். இதனால் சீனியர் வீரர்கள் இருவரும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 14 மாதங்களுக்கு பின் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பின் டி20 கிரிக்கெட் பக்கமே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி திரும்பவில்லை.
இவர்களுடன் கேஎல் ராகுலும் டி20 கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கேஎல் ராகுல் கவனம் செலுத்தி வந்தார். அதுமட்டுமல்லாமல் மிடில் ஆர்டர் வீரராக கேஎல் ராகுல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அண்மையில் முடிந்த தென்னாப்பிரிக்கா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை ஆடினார்.
இருப்பினும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை இந்திய டி20 அணியில் சேர்த்து கொண்ட பிசிசிஐ, கேஎல் ராகுலை மட்டும் புறக்கணித்துள்ளது. இதுதொடர்பாக அவருடன் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் புதிய அவதாரத்தில் கேஎல் ராகுல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பார்க்கப்படுகிறது.