மும்பை: இந்திய அணியின் தொடக்க வீரர்களுக்கான ரேஸில் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா இல்லாத போது இஷான் கிஷன், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் களமிறங்கினர். ஆஸ்திரேலியா தொடரில் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது.

அதேபோல் தென்னாப்பிரிக்கா தொடரில் சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சுப்மன் கில் - இஷான் கிஷன் கூட்டணி களமிறங்கியது. தற்போது 14 மாதங்களுக்கு முன் ரோகித் சர்மா டி20 அணிக்கு திரும்பியுள்ளதால், தொடக்க வீரருக்கான ஒரு இடம் நிரம்பியுள்ளது. மற்றொரு தொடக்க வீரராக யார் களமிறங்குவார்கள் என்பதே கேள்வியாக அமைந்துள்ளது.
4 வீரர்களுக்கு இடையிலான போட்டி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இடையிலான போட்டியாக அமைந்துள்ளது. இதன்படி பார்த்தோமானால், சுப்மன் கில் அறிமுக போட்டியில் அடித்த சதமும், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடித்த அரைசதமும் மட்டுமே காப்பாற்றி வருகிறது. மற்றபடி மீதமுள்ள 11 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் சொற்ப ரன்களுக்கே ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
இந்த பக்கம் ஜெய்ஸ்வாலை பொறுத்தவரை எந்த அணியாக இருந்தாலும் அட்டாக் செய்வது தான அவரின் பாணியாக உள்ளது. இவரிடம் கன்சிஸ்டன்சி மட்டுமே பிரச்சனையாக உள்ளது. இருப்பினும் ஜெய்ஸ்வால் ஸ்ட்ரைக் ரேட்டை பொறுத்தவரை 160ஆகவும், சுப்மன் கில் ஸ்ட்ரைக் ரேட் 145ஆகவும் உள்ளது. ஜெய்ஸ்வால் வெளிநாடுகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை சேர்த்துள்ளார்.
ஆனால் சுப்மன் கில் வெளிநாடுகளில் பெரிதாக சோபிக்கவில்லை. அதேபோல் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரின் பேட்டிங் ஸ்டைலும் ஒரே மாதிரியானதாகவே அமைந்துள்ளது. சிறிது நேரம் எடுத்து செட்டிலான பின் அட்டாக் செய்யும் ஸ்டைலில் ஆட கூடியவர்களாக உள்ளனர். ஆனால் ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அட்டாக் செய்ய கூடியவராக உள்ளார்.
அதேபோல் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் வலதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால், டாப் ஆர்டரில் ஆடக் கூடிய ஒரே இடதுகை பேட்ஸ்மேனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளார். இதனால் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் சுப்மன் கில்லை காட்டிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.