இந்தூர் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இடம்பெற்றார். கடைசியாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விளையாடினார்.
அதன் பிறகு டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் பங்கேற்காமல் விராட் கோலி இருந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடினார். ரோகித் சர்மா கோல்டன் டக் ஆகி வெளியேறியதால் விராட் கோலி ஆட்டத்தின் முதல் ஓவரில் கடைசி பந்தில் களத்திற்கு வந்தார்.

விராட் கோலி எப்படி விளையாடப் போகிறார் என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் இருந்தனர். சும்மா பட்டாசு போல் தொடக்கத்தில் இருந்து தெறிக்க ஆரம்பித்த விராட் கோலி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு ஐந்து பவுண்டர்களை விளாசினார். இதன் மூலம் 16 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 29 ரன்கள் சேர்த்து இருந்தார்.
அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 181 என்று அளவில் அபாயகரமாக இருந்தது. விராட் கோலி அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிக்ஸர் அடிக்க கணக்கு போட்டு கேட்ச் ஆகி வெளியேறினார்.விராட் கோலியின் இந்த ஆட்டத்தை பார்த்தபோது அவர் டி20யிலும் நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார் என்பது தெரிந்தது.ஆப்கானிஸ்தான் வீரர்கள் எப்படி பந்து வீசினாலும் விராட் கோலி அதனை லாபமாக விளையாடினார்.
இன்னும் கொஞ்ச நேரம் அவர் நின்று இருந்தால் ஆட்டத்தை தனியாகவே முடித்திருந்திருப்பார். ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு முறை டக் அவுட் ஆன நிலையில் விராட் கோலி முதல் டி20 போட்டியில் பங்கேற்காமல் இரண்டாவது டி20 போட்டிகள் திரும்பி 180 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பது இந்தியாவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.மேலும் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவார் என கணிக்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய இடத்திலே பட்டையை கிளப்பினார்.