இந்தூர்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடக்கவுள்ளது. மொஹாலியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இளம் ஆல்ரவுண்டர் சிவம் துபே 40 பந்துகளில் 60 ரன்களை விளாசி இந்திய அணி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது. அதேபோல் முதல் டி20 போட்டியில் மகளின் பிறந்தநாள் காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை. தற்போது 14 மாதங்களுக்கு பின் மீண்டும் இந்திய டி20 அணியுடன் இணைந்துள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை கடந்த போட்டியில் காயம் காரணமாக பெஞ்ச் செய்யப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணிக்கு திரும்ப வாய்ப்புகள் உள்ளது. இதனால் ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இருவரும் தொடக்கம் கொடுப்பார்கள் என்று கூறி, கடைசி நேரத்தில் ரோகித் சர்மா ட்விஸ்ட் கொடுத்தார்.
இதன் காரணமாக இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் பெஞ்ச் செய்யப்படலாம். அதேபோல் கடந்த போட்டியில் 3வது இடத்தில் களமிறங்கிய திலக் வர்மா நீக்கப்பட்டு அவரது இடத்திற்கு விராட் கோலி தேர்வு செய்யப்படலாம். அதேபோல் 3வது வேகப்பந்துவீச்சாளரான சிவம் துபே நிச்சயம் அணியில் தேர்வு செய்யப்படுவார். அவரை தொடர்ந்து விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா மற்றும் ஃபினிஷரான சிங் இருவரும் நிச்சயம் இடம்பெறுவார்கள்.
தொடர்ந்து ஆல்ரவுண்டர்களான அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகிய பவுலர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் வெற்றிக்கு பின், இளம் வீரர்களுக்கு சவால் அளிக்க கூடிய இன்னும் சில பரிசோதனை முயற்சிகள் செய்யப்படும் என்று ரோகித் சர்மா கூறியிருந்தார். அதனால் இன்றைய ஆட்டத்தின் திட்டத்தில் சில ஆச்சரியங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.