மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கான்பெராவில் நடைபெற்ற முதல் டி20 போட்டி சில ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டி20 போட்டி, புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) இன்று (அக்டோபர் 31) நடைபெறுகிறது. ஆனால், இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்படுமா? என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கான்பெராவில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஆசியக் கோப்பையில் விட்ட இடத்திலிருந்து தொடங்குவது போல, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.
துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா (19) ஆட்டமிழந்தாலும், மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில் (20 பந்துகளில் 37* ரன்கள்) மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (24 பந்துகளில் 39* ரன்கள்) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தபோது, கனமழை குறுக்கிட்டது. தொடர் மழை காரணமாக, ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடியால் திணறிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு, மழையே ஒருவிதத்தில் உதவியது.

கான்பெராவைப் போலவே மெல்போர்னிலும் இரண்டாவது டி20 போட்டிக்கு மழை அச்சுறுத்தல் நீடிக்கிறது. விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள மெல்போர்ன் மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதனால், ஆட்டம் தாமதமாகத் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், போட்டியின் மத்தியப் பகுதியில் வானிலை சற்று சீரடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெற வழிவகுக்கலாம். மெல்போர்னிலும் கான்பெராவைப் போலவே குளிர்ச்சியான சூழலே நிலவும்.
முதல் போட்டி கைவிடப்பட்டதால், இந்தப் போட்டியில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற இரு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும். புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் ஒரு முழுமையான, விறுவிறுப்பான போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? அல்லது மழை குறுக்கிடுமா?