ரோஹித் சர்மா
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா முதல் போட்டியில் நிதான ஆட்டம் ஆடி ஏமாற்றினார் என்றால், இரண்டாம் போட்டியில் டக் அவுட் ஆகி வெறுப்பேற்றினார். எனினும், ரோஹித் நிச்சயம் அணியில் இடம் பிடிப்பார். ரோஹித் சர்மா அடிக்கத் துவங்கினால் அவரை நிறுத்த முடியாது. அப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை உலகக்கோப்பைக்கு முன் ஒரு முன்னோட்டமாக ஆடிக் காட்டுவாரா ரோஹித்?
ஷிகர் தவான்
தவான் அணியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்வது கடினம். கடந்த 5 இன்னிங்க்ஸ்களில் ஒருமுறை கூட தவான் 30 ரன்களை தாண்டவில்லை. இதனால், உலகக்கோப்பைக்கு முன் சோதனை செய்து பார்க்க தயாராக இருக்கும் ராகுல், மூன்றாம் போட்டியில் துவக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
விராட் கோலி
விராட் கோலி வழக்கம் போல தொடர்ந்து தன் ரன் குவிப்பை நிறுத்தாமல் செய்து வருகிறார். இரண்டாவது போட்டியில் பேட்டிங் சறுக்கிய போது கடைசி சில ஓவர்களுக்கு முன்பு வரை வரை நின்று அணியை காத்தார். அதே பணியை மூன்றாம் போட்டியிலும் தொடர்வார் என எதிர்பார்க்கலாம்.
அம்பதி ராயுடு
அம்பதி ராயுடு நியூசிலாந்து தொடரில் நன்றாக ஆடினார். ஆனால், தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து வெறுப்பேற்றி உள்ளார். இவருக்கு மூன்றாம் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதில் ராயுடு ரன் குவிக்கவில்லை என்றால், அடுத்தடுத்த போட்டிகளில் தன் இடத்தை இழக்க நேரிடும்.
சொந்த மண்ணில் தோனி
தோனி தன் சொந்த மண்ணில் ஆடவுள்ளார். இது தான் தன் சொந்த ஊரில் தோனி ஆடவுள்ள கடைசி சர்வதேச போட்டி என்ற பேச்சு உள்ளது. தன் சொந்த ஊரில் கடைசியாக ஆடவுள்ள தோனி, தன் கோடான கோடி ரசிகர்களை குளிர்விக்கும் வகையில் ஒரே ஒரு அதிரடி சதம் அடித்தால் போதும். செய்வாரா?
கேதார் ஜாதவ்
இந்திய அணியை சரியான நேரத்தில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் காப்பாற்றி வருபவர் கேதார் ஜாதவ் தான். இரண்டாம் போட்டியில் பேட்டிங்கில் சிறிது சறுக்கினாலும், முதல் போட்டியில் இவர் ஆடிய ஆட்டத்தை மறந்து விட முடியாது. பந்துவீச்சில் இரு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மூன்றாம் போட்டியிலும் கலக்குவார்.
விஜய் ஷங்கர்
விஜய் ஷங்கர் ஆல்-ரவுண்டரா, பேட்ஸ்மேனா என்ற குழப்பம் நிலவுகிறது. எனினும், பேட்டிங்கில் இரண்டாம் போட்டியில் அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதே போல கடைசி ஓவரில் பதற்றமில்லாமல் அவர் பந்து வீசிய விதமும் பெரிதும் பேசப்பட்டது. மூன்றாம் போட்டியில் நிச்சயம் விஜய் ஷங்கர் இடம் பிடிப்பார். ஆனால், இந்த போட்டியில் பேட்டிங்கில் பெயர் வாங்கியதைப் போல பந்துவீச்சிலும் அவர் பெயர் வாங்க வேண்டும்.
ரவீந்திர ஜடேஜா
ஜடேஜா உலகக்கோப்பைக்கான உத்தேச வீரர்கள் பட்டியலில் இருக்கிறாரா? இல்லையா? என்பது பெரிய கேள்விக்குறி. ஆனால், ஹர்திக் பண்டியா காயத்தால் வாய்ப்பு பெற்ற ஜடேஜா பந்துவீச்சாளராக தன் பணியை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால், பேட்டிங்கில் இவர் வழக்கம் போல அணிக்கு பெரிய அளவில் உதவுவதில்லை என்ற குறை உள்ளது. மூன்றாம் போட்டியில் சாஹலுக்கு வாய்ப்பு அளிக்க நினைத்தால், ஜடேஜா தன் இடத்தை இழக்க நேரிடலாம்.
புவனேஸ்வர் குமார்
முதல் இரண்டு போட்டிகளின் போது ஓய்வில் இருந்த புவனேஸ்வர் குமார், நிச்சயம் மூன்றாம் போட்டியில் களமிறங்குவார். இவருக்கு வழி விட்டு ஷமி ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ் ஆஸ்திரேலிய தொடரில் இதுவரை ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இவரது பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் அடிக்க திணறி வருவதும் குறிப்பிடத்தக்கது. மூன்றாவது போட்டியிலும் குல்தீப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஜஸ்ப்ரிட் பும்ரா
பும்ரா முதல் போட்டியில் ஓவருக்கு 6 ரன்கள் கொடுத்ததே அதிக ரன்கள் கொடுத்து விட்டார் என்ற பேச்சை கிளப்பியது. அனால், இரண்டாம் போட்டியில் 10 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். மூன்றாவது போட்டியில் புவனேஸ்வர் குமாருடன் இணைந்து, எதிரணியை அச்சுறுத்துவார் என எதிர்பார்க்கலாம்.