பிரிஸ்பேன்: இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷேன் இருவரும் பெயில்ஸ்-ஐ மாற்றிய விவகாரத்தால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அது ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும், அந்த சம்பவம் நடந்த அடுத்த சில ஓவர்களில் மார்னஸ் லாபுஷேன் தனது விக்கெட்டை இழந்தார்.
இது முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை எரிச்சலடையச் செய்தது. இது பற்றி பேசிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், சிராஜ் பெயில்ஸ்-ஐ மாற்றியதால் மார்னஸ் லாபுஷேன் கவனத்தை சிதற விட்டு தனது விக்கெட்டை இழந்து விட்டதாக அவரை சாடினார்.

மேலும், அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் முகமது சிராஜை அருகிலேயே வரவிட்டு இருக்க மாட்டேன் எனவும், அவரை அருகே கூட வராதே என கூறி இருப்பேன் எனவும் காட்டமாக பேசினார் ஹைடன்.
மார்னஸ் லாபுஷேன் 50 பந்துகளை சந்தித்து ஆடிவந்த நிலையில் சிராஜ் அவரது கவனத்தை திசை திருப்பினார். அப்போது விக்கெட் வீழ்ச்சி இல்லாமல் இந்திய அணி திணறி வந்த நிலையில் மூன்றாவது விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற நிலையில் முகமது சிராஜ், மார்னஸ் லாபுஷேன் அருகே வந்து ஸ்டம்ப் மீது இருந்த பெயில்ஸ்-ஐ மாற்றி வைத்தார்.
இரண்டு பெயில்ஸ்-ஐயும் எடுத்த சிராஜ், வலது பக்கம் இருந்த பெயில்ஸ்-ஐ இடது புறமும், இடது புறம் இருந்த பெயில்ஸ்-ஐ வலது புறமும் மாற்றி வைத்தார். இது போல மாற்றி வைத்தால் விக்கெட் கிடைக்கும் என்ற ஒரு வேடிக்கையான நம்பிக்கை டெஸ்ட் போட்டிகளில் உள்ளது.
இந்தியா விளையாடுவது முட்டாள்தனமான கிரிக்கெட்.. சிராஜ்,ரோகித்துக்கு யோசனையே இல்ல- சைமன் கேடிச் தாக்கு
முகமது சிராஜ் வேடிக்கையாக அதை செய்து இருந்தாலும் அடுத்த சில ஓவர்களில் மார்னஸ் லாபுஷேன் உண்மையாகவே தனது விக்கெட்டை இழந்தார். இது பற்றி பேசிய மேத்யூ ஹைடன், "லாபுஷேன் 55 பந்துகளை சந்தித்து விட்டார். அவர் இந்திய வீரர்களை சீண்டவில்லை. இந்த நிலையில் ஒரு பேட்ஸ்மேன் கிரீஸில் இருக்கும் போது பவுலர் பெயில்ஸ்-ஐ மாற்றினால், அந்த சிறிய சம்பவத்தை நான் கண்டு கொண்டு கூட இருக்க மாட்டேன்." என்றார்.
"நான் பவுலரை கண்ணால் கூட பார்த்திருக்க மாட்டேன். சிராஜ் என்ன செய்கிறார்? என்பதை பற்றி நான் கண்டு கொண்டு இருக்க மாட்டேன். அவர் எனக்கு அருகிலேயே வந்து இருக்க மாட்டார். ஒருவேளை சிராஜ் எனக்கு அருகே வந்திருந்தால், "எனது இடத்தில் நீ என்ன செய்கிறாய்? வெளியே கிளம்பு" என்று சொல்லி இருப்பேன். சிராஜ் பெயில்ஸ்-ஐ மாற்றும் முன்பே இதை நான் சொல்லி இருப்பேன்." என்றார் மேத்யூ ஹைடன். இதன் மூலம் லாபுஷேன் அந்த சம்பவத்தால் தனது கவனத்தை இழந்து விக்கெட்டை பறிகொடுத்து விட்டார் என ஹைடன் சாடினார்.