ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மழையால் காப்பாற்றப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது மழையும் காலை வாரிவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சூழலில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுக்க இந்திய அணி நான்காவது நாள் மதியநேர உணவு இடைவெளியில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருக்கிறது.

பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி கூடுதலாக 79 ரன்கள் அடிக்க வேண்டும். இந்த நிலையில் நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் மழை பாதிப்பு இருக்கும் என்பதால் இந்த போட்டி சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மழையும் காலை வாரி விட்டது.
இன்று வெளியாகியுள்ள வானிலை அறிக்கை படி மதியம் ஒரு மணிக்கு 0.7 மில்லி மீட்டரும், மாலை 4 மணிக்கு 3.4 மில்லி மீட்டர் மழையும் பெய்யும். பிரஸ்பேன் மைதானத்தில் தண்ணீர் வெளியேற நல்ல வசதி இருப்பதால், இதெல்லாம் பெரிய சிக்கலே கிடையாது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டால் கூட மீண்டும் தொடங்கி விடும்.
இதேபோன்று ஐந்தாவது நாளில் மதியம் ஒரு மணிக்கு 3.1 மில்லி மீட்டரும், மதியம் 4 மணிக்கு 14 மில்லி மீட்டரும் மழை பெய்யக்கூடும்.
இதனால் இந்திய அணி குறைந்த பட்சம் 100 ஓவர்கள் மேலாவது பேட்டிங் செய்தால் மட்டுமே இந்த டெஸ்ட் போட்டியில் சமன் செய்ய முடியும். இல்லையென்றால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை பெறுவது உறுதி.
இதன் காரணமாக முதல் இன்னிங்சில் தடுமாறிய ஜெய்ஸ்வால், விராட் கோலி, கில் போன்ற வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆப் சைட் செல்லும் பந்தை அடிக்க முற்பட்டால் இந்திய அணியை அந்த கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.