அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா, சிராஜ் உள்ளிட்டோர் மைதானத்திலேயே கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் சேர்த்தனர்.

இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வெற்றிக்கு பின் ஆஸ்திரேலியா அணி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், உடனடியாக ஆஸ்திரேலியா வீரர்களுக்கு வாழ்த்து கூறிவிட்டு, ரோகித் சர்மா மைதானத்திலேயே கதறி அழுதார்.
அதுமட்டுமல்லாமல் யாரையும் எதிர்கொள்ள முடியாமல் முதல் வீரராக ஓய்வறைக்கு ஓடினார். அதேபோல் இந்திய அணியின் இளம் வீரரான முகமது சிராஜும் மைதானத்திலேயே கதறி அழ, அவருக்கு பும்ரா ஆறுதல் கூறினார். அதேபோல் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் மைதானத்திலேயே கீழே முட்டிப்போட்டு அமர்ந்து கண்ணீர் விட்டார். இது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்பின் களத்திற்கு வந்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் சோகத்துடன் வாழ்த்து கூறினார். 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்றதை போல் மீண்டும் இந்திய அணி இம்முறை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் வெற்றியை தட்டி பறித்தது ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.