பெங்களூரு: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்படாத நிலையில், அக்சர் படேல் அடுத்தடுத்து 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்று பிசிசிஐக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிய ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். அதேபோல் அதிரடியாக ஆடிய அக்சர் படேல் 21 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்து தோல்வியை சந்தித்தது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும். ரவி பிஷ்னாய் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். பேட்டிங்கில் 31 ரன்கள் சேர்த்த அவர், பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து முக்கியமான வீரரான டிம் டேவிட் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் ஆட்டநாயகன் விருது அக்சர் படேலுக்கு வழங்கப்பட்டது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் அக்சர் படேல் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டதோடு, அவருக்கு துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே உலகக்கோப்பை தொடரை மிஸ் செய்த அக்சர் படேலுக்கு, டி20 அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டது கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
ஆனால் அந்த பிரச்சனையை பற்றி கவலையில்லாமல், அக்சர் படேல் எழுச்சி பெற்று பதிலடி கொடுத்துள்ளார். கடந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் வென்றதோடு, இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றுள்ளார். அடுத்தடுத்து 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்று பிசிசிஐ-க்கு பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.