பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது மகிழ்ச்சி என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரும் சிறந்த பங்களிப்பை வழங்கியதாக கூறிய அவர், பவுலிங்கில் மூவரும் அசத்திவிட்டதாக பாராட்டியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கனமழை காரணமாக டிராவில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற நிலையில் உள்ளன. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 445 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 260 ரன்களை சேர்த்தது.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலையுடன் பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் பும்ரா, சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் மூவரின் அபார பவுலிங் காரணமாக, ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன்பின் 275 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 8 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது.
இதன்பின் கனமழை பெய்ய தொடங்கிய நிலையில், ஆட்டம் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், தொடர்ச்சியாக மழை குறுக்கிட்டது நிச்சயம் சோகம் தான். ஆனால் மெல்போர்னுக்கு 1-1 என்ற கணக்கில் செல்வது மகிழ்ச்சி. இங்கிருந்து பெற்ற நம்பிக்கையுடன் அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட வெல்ல முயற்சிப்போம்.
நேற்றைய ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு பின் ஒரு பேட்ஸ்மேன் பொறுப்பேற்று கடைசி வரை நிற்க வேண்டும் என்று விரும்பினோம். அதேபோல் கனமழையையும் கவனத்தில் கொண்டிருந்தோம். அப்போது ஜடேஜா மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் கேஎல் ராகுலின் பங்களிப்பையும் மறக்க கூடாது. கடைசி நேரத்தில் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் மிகச்சிறப்பாக விளையாடினர்.
அதேபோல் பவுலிங்கிலும் அசத்திவிட்டனர். ஆகாஷ் தீப்பை பொறுத்தவரை கடைசி வரை போராடக் கூடிய வீரர். சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதியவர் என்றாலும், வலைப்பயிற்சியில் கூடுதலாக கடின உழைப்பை கொடுத்து வருகிறார். அவரின் தோள்களில் கைகளை போட்டு வழிநடத்த இந்திய அணியில் ஏராளமானோர் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.