பிரிஸ்பேன்: காபா மைதானத்தில் முதல் பேட்டிங் ஆடுவதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நடுங்குவதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் கிளென் மெக்ராத் விமர்சித்துள்ளார். இதன் காரணமாக டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்ததாக கூறிய அவர், ரோஹித் சர்மாவின் முடிவால் எந்த ஆச்சரியமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. காபா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் 13.2 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில், கனமழை பெய்ய தொடங்கியது.

இதன்பின் கனமழை தொடர்ந்து மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் முதல் நாளுக்கான டிக்கெட் விலை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மீதமுள்ள 4 நாட்களில் ஒவ்வொரு நாளும் 98 ஓவர்கள் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த முடிவினை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் கிளென் மெக்ராத் பேசுகையில், ரோஹித் சர்மா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்ததில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் ரோஹித் சர்மா இந்த மைதானத்தில் முதல் பேட்டிங் செய்ய பயப்படுகிறார்.
காபா போன்ற மைதானத்தில் முதலில் பவுலிங் செய்து சொதப்பினால், அது மீடியாவில் கடுமையாக விமர்சிக்கப்படும். அதுவே முதலில் பேட்டிங் செய்திருந்தால், தைரியமான முடிவாக பாராட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய கேப்டன் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த 8 போட்டிகளில் ஒன்றில் கூட வென்றதில்லை.
4 போட்டிகள் டிராவிலும், 4 போட்டிகளில் இந்திய அணி தோல்வியையும் சந்தித்துள்ளது. காபா மைதானத்தை பொறுத்தவரை கடைசியாக நடைபெற்றுள்ள 7 டெஸ்ட் போட்டிகளில் சேஸிங் செய்த அணியே வெற்றியை பெற்றுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களின் விமர்சனங்கள் இந்திய அணி வீரர்களை பலவீனப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த 2 போட்டிகளில் இந்திய அணி முதல் பேட்டிங் ஆடி பெரிய ரன்களை குவிக்கவில்லை. இதனால் பவுலர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. இம்முறை பவுலர்கள் அழுத்தமின்றி செயல்பட முடியும். அதேபோல் 2வது நாளுக்கு பின் பிட்ச் பேட்டிங்கிற்கு உதவி செய்ய தொடங்கும் என்பதால், இந்திய பேட்ஸ்மேன்களாலும் எளிதாக ரன்களை குவிக்க முடியும்.