அகமதாபாத்: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் கூட நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே அகமதாபாத் மைதானத்திற்கு ரசிகர்கள் வர தொடங்கியுள்ள நிலையில், வீரர்களும் மைதானத்திற்கு வந்துவிட்டனர். இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏனென்றால் ஆஸ்திரேலியா வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வினை கண்டாலே பீதியடைந்து வரும் நிலையில், பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற கடைசி 4 போட்டியில் மூன்றில் சேஸிங் செய்த அணியே வென்றுள்ளது. இதனால் வெற்றியில் டாஸின் பங்கு முக்கியத்துவம் பெறும் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உலகக்கோப்பை சாம்பியன் வீரரான கவுதம் கம்பீர் பேசுகையில், ரவிச்சந்திரன் அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று நான் நினைக்கவில்லை. அவருக்கான இடம் பிளேயிங் லெவனில் இருப்பதாக பார்க்கவில்லை. இதுவரை இந்திய அணி எப்படி வெற்றிபெற்றுள்ளதோ, அதே பாணியை எதற்காக மாற்ற வேண்டும். 5 பவுலர்களுடன் களமிறங்குவதே சிறந்ததாக பார்க்கிறேன்.
அதேபோல் டாஸை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்ய வேண்டுமா அல்லது பவுலிங் செய்ய வேண்டுமா என்று முடிவு செய்வது கடினமாக உள்ளது. ஆனால் என்னை பொறுத்தவரை எந்த அணி டாஸை வெல்கிறதோ, அவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும். முடிந்த அளவிற்கு பெரிய இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும். அதன்பின் ஆடுகளம் மற்றும் சூழலை வைத்து தான் இது ஹை ஸ்கோரிங் ஆட்டமா என்பதை கண்டறிய முடியும்.
அதேபோல் இறுதியாக பேட் மற்றும் பால் இரண்டுக்குமான யுத்தமாக தான் இது இருக்க போகிறது. அதேபோல் இது இறுதிப்போட்டி என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் வீரர்கள் அனைவரும் அழுத்தத்தை எதிர்கொள்வதோடு, கூடுதல் சிறப்புடன் விளையாட வேண்டும். நிச்சயம் இந்திய அணி கோப்பையை வெல்லும். ஒருவேளை முடிவு இந்திய அணிக்கு சாதகமாக இல்லையென்றாலும் கூட இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை விளையாடி, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது என்பது உண்மை என்று கூறியுள்ளார்.