பிரிஸ்பேன்: இந்திய அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தால், ரோஹித் சர்மாவால் ஒரு பேட்ஸ்மேனாக டெஸ்ட் அணியில் தாக்கு பிடிக்க முடியாது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. 2 நாட்கள் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ள போதும், இந்திய அணியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே கொஞ்சம் கூட நம்பிக்கையை பெறவில்லை. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 445 ரன்களை குவித்துள்ளது.

ஆனால் அதே பிட்சில் களமிறங்கிய இந்திய அணி வெறும் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பொறுப்பு இல்லை என்பதோடு, கொஞ்சம் கூட தெளிவும் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே கேப்டன் ரோஹித் சர்மா மீது ரசிகர்களின் விமர்சனம் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கேப்டன்சியில் மிக மோசமாக சொதப்பி வரும் நிலையில், பேட்டிங்கிலும் ஃபார்மின்றி தவித்து வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெறும் 92 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த ரோஹித் சர்மா, 2வது டெஸ்ட் போட்டியில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 3வது டெஸ்டில் தொடக்க வீரராக வருவார் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் மீண்டும் ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் கூட்டணியே தொடக்கம் கொடுத்தது. இதில் ஜெய்ஸ்வால் 2வது பந்திலேயே 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதனால் புதிய பந்தில் இருந்து தப்புவதற்காக ரோஹித் சர்மா நம்பர் 6 பேட்டிங் வரிசையில் களமிறங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அப்போதும் கூட மிட்சல் ஸ்டார்க் பவுலிங்கை எதிர்கொள்ள ரோஹித் சர்மா திண்டாடினார்.
நாளைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா பேட்டிங்கில் பெரிய ஸ்கோரை பதிவு செய்யவில்லை என்றால், அவரை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோஷங்கள் அதிகரிக்கும். ஏற்கனவே கேப்டன்சி பதவியை ராஜினாமா செய்தால், இந்திய டெஸ்ட் அணியில் ஒரு பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்ற விவாதங்கள் முன்னாள் வீரர்கள் இடையே பேசப்பட்டு வருகிறது.
ஒருவேளை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இழக்கும் பட்சத்தில் இந்திய அணியின் கேப்டன்சியை மாற்ற வேண்டும் என்ற பேச்சுகள் பரவலாக எழும். ஏற்கனவே 38 வயதை எட்டயுள்ள ரோஹித் சர்மா, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் ஓரங்கட்டப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் குறைந்தது 2 சதங்களை விளாசவில்லை என்றால், இந்திய அணியின் தோல்விக்கு ரோஹித் சர்மா தான் முதல் பலிகடாவாக மாற்றப்படுவார்.
ஏற்கனவே இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக பும்ரா முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், மாற்று தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் தயாராக இருக்கின்றனர். இதனால் தோனி மற்றும் அனில் கும்ப்ளேவை போல் ரோஹித் சர்மா தாமான முன் வந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் அறிவுறுத்த தொடங்கியுள்ளனர்.