மும்பை : 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா அவுட்டே இல்லை என்றும், அவர் அடித்த பந்தை ட்ராவிஸ் ஹெட் சரியாக கேட்ச் பிடிக்கவில்லை என்றும் ஒரு தகவல் வட இந்திய யூட்யூப் சேனல்கள் சிலவற்றில் தீயாக பரப்பப்பட்டு வருகிறது.
அதிலும் உச்சகட்டமாக ரோஹித் சர்மாவுக்கு தவறான அவுட் கொடுத்து விட்டதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மீண்டும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை நடத்த உள்ளது என்றும் கூறி வருகிறார்கள்.
உண்மையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்கவில்லை என்று சமூக ஊடகங்களில், குறிப்பாக யூடியூப்பில் சில வட இந்திய சேனல்களில் இருந்து செய்திகள் வெளியாகின. ரோஹித் சர்மா கொடுத்த அந்த கேட்ச்சை டிராவிஸ் ஹெட் தவறவிட்டதாகவும், ஆனால் அது களத்தில் இருந்து நான்காவது அம்பயர் வரை யாருக்கும் தெரியாமல் போனதாகவும் அந்த செய்திகளில் கூறப்பட்டது. யூடியூப்பில் வெளியான அந்த வீடியோக்கள் அடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இப்போது பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா?

உண்மையில் ரோஹித் ஷர்மா அவுட் ஆகவில்லை என்றும், டிராவிஸ் ஹெட் கேட்ச்சை தவறவிட்டார் என வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் தவறானவை. போட்டியின் போதே ட்ராவிஸ் ஹெட், ரோஹித் சர்மா கேட்ச்சை பிடிப்பது பல முறை காட்டப்பட்டது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை ஆதிக்கம் செலுத்தி வென்றது என்பதே உண்மை. பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங், போட்டி வியூகம் என அனைத்து விதத்திலும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை விட சிறப்பாக இருந்தது. அதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.
ஆனால், பல இந்திய ரசிகர்கள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி முடிவடைந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்தியா தோல்வி அடைந்ததை ஏற்கத் தயாராக இல்லை. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை, ஆஸ்திரேலியா ஏமாற்றியதாக சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் வெளிவருவதற்கும் இதுவே காரணம். இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் ஒரு பிரிவினர் இதுபோன்ற பொய்யான தகவல்களை உண்மை என நம்பி வேகமாக அதை பகிர்ந்து வருகின்றனர்.
யூடியூப்பில் செய்தி சேனல்கள் என்ற பெயரில் பல போலி சேனல்கள் உள்ளன, அவை தவறான செய்திகளை மட்டுமே வெளியிடுவதன் மூலம் அதிக பார்வைகள், லைக்குகள் மற்றும் சப்ஸ்கிரைப்பர்ஸை அதிகரிக்க முயல்கின்றன. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்வியை யாராலும் ஜீரணிக்க முடியாத நிலையில் அதைப் பயன்படுத்தி இதுபோன்ற போலியான வீடியோக்களை வெளியிட்டு அதிக பார்வைகளை பெற அந்த போலி சேனல்கள் முயற்சி செய்கின்றன என்பதே உண்மை.