அகமதாபாத்: உலகக்கோப்பை தொடருக்கான தொடர் நாயகன் விருது பெற்ற விராட் கோலி, பேட்டியளிக்கும் மனநிலையில் இல்லை என்று கூறி விலகி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் மைதானத்திலேயே கண்கலங்கி நின்றனர். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெற்றிபெற்றோருக்கு வாழ்த்துவிட்டு கலங்கிய கண்களுடன் முதல் நபராக ஓய்வறை நோக்கி ஓடினார்.

தொடர் நாயகன் விருதை பெற்றுக் கொண்ட விராட் கோலியை எதிர்பார்த்து ரவி சாஸ்திரி கேள்விகளை கேட்க தயாரான நிலையில், நேரடியாக கைகளை காட்டி பேசும் மனநிலையில் இல்லை என்று சிக்னல் கொடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட ரவி சாஸ்திரி, விராட் கோலியை பற்றி எதுவும் பேசாமல் அடுத்த விருதுக்கான வீரரை அறிவித்தார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.