பெங்களூரு: இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் இதுவரை 10 டி20 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், முதல் முறையாக ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு சிங். ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக களமிறங்கி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்சர்களை தொடர்ச்சியாக விளாசி அசாத்திய வெற்றியை பெற்று கொடுத்தார் ரிங்கு சிங். அதன்பின் ரிங்கு சிங்கின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.

கடந்த ஐபிஎல் தொடரில் மட்டும் 14 போட்டிகளில் விளையாடி 460க்கும் அதிக ரன்களை விளாசினார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர்களில் ரிங்கு சிங்கின் ஆட்டம் வேறு மாதிரி இருந்தது. இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியிலேயே இந்திய அணியின் வெற்றிக்கு உதவி ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வி காரணமாக கிரிக்கெட்டை பார்க்காமல் ஏராளமான ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் ஒரே போட்டியின் மூலமாக டிவி முன் உட்கார வைத்தார் ரிங்கு சிங். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில், அபாரமாக சிக்சரை விளாசினார் ரிங்கு சிங்.
இதனால் ரிங்கு சிங்கின் ஆட்டத்தை பார்க்கவே ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்தனர். அவரும் ஒவ்வொரு போட்டியில் எந்த பதற்றமும், பயமும் இல்லாமல் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக இந்திய அணிக்காக 9 போட்டிகளில் விளையாடியும் ஒருமுறை கூட ஒற்றை இலக்க ரன்னில் ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் இருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக 7வது ஓவரிலேயே நட்சத்திர வீரர் ரிங்கு சிங் களமிறக்கப்பட்டார். நிதானமாக ஆடிய அவர், 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தன்வீர் சங்கா வீசிய பந்தில் ஸ்லாக் ஸ்வீப் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். இதன் காரணமாக ரிங்கு சிங் முதல் முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து சோகத்துடன் வெளியேறினார்.