பிரிஸ்பேன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடக்கவுள்ள காபா மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து பார்க்கலாம். இந்த பிட்சில் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்பதால் முதல் செஷனில் பேட்ஸ்மேன்கள் நிதானம் காக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. இதுவரை நடந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருக்கின்றன. இதனால் 3வது டெஸ்ட் போட்டியில் வென்று முன்னிலை பெற வேண்டும் என்று இரு அணிகளும் முனைப்புடன் இருக்கின்றன.

காபா மைதானத்தை பொறுத்தவரை இதுவரை நடந்துள்ள 66 போட்டிகளில் 42ல் ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளன. அதேபோல் 10 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோராக 327 ரன்களும், 2வது பேட்டிங் ஆடும் அணியின் சராசரி ஸ்கோராக 317 ரன்களும் உள்ளன.
2வது இன்னிங்ஸை பொறுத்தவரை முதல் பேட்டிங் ஆடும் அணியின் சராசரி ஸ்கோராக 238 ரன்களும், சேஸிங் செய்யும் அணியின் சராசரியாக 161 ரன்களும் உள்ளன. வழக்கமாகவே காபா மைதானத்தில் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும். இதனால் முதல் நாள் ஆட்டத்தில் பிட்ச் முழுமையாக பவுலர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பந்து தேய்மானமடைந்த பின் பேட்ஸ்மேன்களால் விரைவாக ரன்களை குவிக்க முடியும். 2வது நாள் ஆட்டத்தின் கடைசி செஷனில் இருந்து பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு முழுமையாக ஒத்துழைக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஆட்டத்தை பொறுமையாக விளையாடினாலே ரன்களை குவிக்க முடியும்.
அதேபோல் டாஸை பொறுத்தவரை முதல் பேட்டிங் ஆடிய அணிகள் 26 முறையும், 2வது பேட்டிங் ஆடிய அணிகள் 27 முறையும் வென்றிருக்கின்றன. இதனால் டாஸ் வெல்லும் அணி பவுலிங்கை தேர்வு செய்யவே வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் பிட்சில் இருக்கும் பவுன்ஸ் மற்றும் வேகத்தை பயன்படுத்தி எளிதாக எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்க முடியும்.
அதேபோல் காபா மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஷேன் வார்னே மற்றும் லயன் இருவரும் இடம்பிடித்துள்ளனர். இதனால் டாப் ஸ்பின் செய்யக் கூடிய ஒரு ஸ்பின்னரை இந்திய அணி கட்டாயம் களமிறங்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் டாப் ஸ்பின் செய்யக் கூடிய பவுலர் என்றால், அது அஸ்வின் மட்டும் தான். இதனால் வாஷிங்டன் சுந்தர் அல்லது அஸ்வின் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.