அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பை தொடரை வென்ற நிலையில், தனக்கு இந்திய ரசிகர்கள் அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்புவதாக மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன் இன்ஸ்டாகிராமில் குற்றம்சாட்டியுள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலியா அணியின் ஒவ்வொரு வீரரும் காரணமாக அமைந்தனர்.

குறிப்பாக ரோகித் சர்மா அதிரடியாக விளையாடிய போது அவரை எதிர்த்து அச்சமின்றி பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தினார் மேக்ஸ்வெல். அதேபோல் 6 ஓவர்கள் வீசிய மேக்ஸ்வெல் வெறும் 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் வின்னிங் ரன்களை மேக்ஸ்வெல் விளாசி சாதித்தார். இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மறக்க முடியாத வரலாற்று சிறப்புமிக்க ஆட்டத்தை மேக்ஸ்வெல் விளையாடினார்.
ஒற்றை ஆளாக நின்று இரட்டை சதம் விளாசியதோடு, அணியையும் வெற்றிபெற வைத்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் 2வது ஸ்பின்னராகவும் மேக்ஸ்வெல் சிறப்பாகவே செயல்பட்டார். நேற்றைய ஆட்டம் முடிவடைந்த பின் மேக்ஸ்வெல் உற்சாகமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்திய அணியை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியதால், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் மனைவியின் இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அருவருக்கத்தக்க வகையில் மெசேஜ் அனுப்பியுள்ளனர். இது குறித்து மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் பிறந்து வளர்ந்த என் கணவர் மற்றும் என் குழந்தையின் தந்தை விளையாடும் ஆஸ்திரேலியாவை ஆதரித்து, அதே சமயம் இந்தியராகவும் இருக்கலாம் என்பதை மெசேஜ் அனுப்புபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனக்கு மெசேஜ் அனுப்புவதற்கு பதிலாக சர்வதேச பிரச்சனைகளுக்கு குரல் கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார். விளையாட்டின் பெயரில் வெறுப்புணர்வில் அவருக்கு ரசிகர்கள் மெசேஜ் அனுப்பியுள்ளது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ்நாட்டு பெண்ணான வினி ராமனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.