கவுகாத்தி: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எமனாக அமைந்த டிராவிஸ் ஹெட்டை, இந்திய அணியின் ஆவேஷ் கான் சிறப்பான யுக்திகளுடன் வீழ்த்தியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி பவுலர்கள் டிராவிஸ் ஹெட்டை வீழ்த்த முடியாமல் கடைசி வரை திணறினார்கள். அவரை மட்டும் வீழ்த்தி இருந்தாலே உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் முடிவே மாறி இருக்கும். சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 138 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி மட்டுமல்லாமல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்திய அணிக்கு எமனாக அமைந்தவர் டிராவிஸ் ஹெட். இந்த நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியா அணிக்காக முதல்முறையாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்கினார்.
முதல் ஓவரிலேயே பவுண்டரிகளை விளாசி அதிரடியாக தொடங்கினார் டிராவிஸ் ஹெட். பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் என்று இருவரும் மாறி மாறி முயன்றும் அசாத்தியமான பவுண்டரிகளை அடித்து கொண்டே இருந்தார். இவரின் அதிரடி காரணமாக ஆஸ்திரேலியா அணி 5 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்து அசத்தியது. இதனால் மைதானத்தில் இருந்த இந்திய அணி ரசிகர்கள் அமைதி காத்தனர்.
இதனிடையே 4வது ஓவரை ஆவேஷ் கான் வீசிய போதே, டிராவிஸ் ஹெட்டிற்கு சில நல்ல ஷார்ட் பால்களை வீசி சிரமத்திற்கு உள்ளாக்கினார். இதனையறிந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், உடனடியாக 7வது ஓவரிலும் ஆவேஷ் கானை அட்டாக்கில் கொண்டு வந்தார். அந்த ஓவரில் சில பவுண்டரிகள் சென்றாலும், ஷார்ட் பாலை எதிர்கொள்வதில் டிராவிஸ் ஹெட் திணறினார்.
அப்போது சரியாக ஷார்ட் பாலை கொஞ்சம் குறைந்த வேகத்தில் வீச, அந்த பந்தை அடிக்க தயாராக இருந்த டிராவிஸ் ஹெட் பேட்டை வேகமாக சுழற்றினார். அந்த பந்து டாப் எட்ஜாகி ஃபைன் லெக் திசையில் நின்றிருந்த ரவி பிஷ்னாய் கைகளில் சென்று விழுந்தது. இதன் மூலமாக அபாயகரமாக ஆடி வந்த டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.