443 ரன்களுக்கு டிக்ளர்
ஆஸ்திரேலியா - இந்தியா இடையே மெல்போர்ன் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி பெற கடும் முயற்சியில் இருக்கின்றன. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் அடித்து இருந்த நிலையில் டிக்ளர் செய்தது.
பேட்ஸ்மேன்கள் அசத்தல்
இந்திய பேட்டிங்கில் மாயன்க் 76, புஜாரா 106, கோலி 82, ரோஹித் 63* என நிறைவாக பேட்டிங் செய்தனர். ரஹானே 34, ரிஷப் பண்ட் 39 ரன்கள் எடுத்ததும் அணியின் ரன்களை உயர்த்த உதவியது. ஜடேஜா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்தியா டிக்ளர் முடிவை அறிவித்தது. அப்போது ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ரோஹித்தை பயன்படுத்தி இருக்கலாம்
ரோஹித் சர்மாவை கடைசி மூன்று விக்கெட்கள் இருந்த நிலையில் அடித்து ஆடுமாறு கூறி அணியின் ரன்களை உயர்த்திக் கொள்ள வாய்ப்பு இருந்தும், கோலி அதை செய்யவில்லை. மாறாக, இரண்டாம் நாள் முடிய இருந்த நேரத்தில் டிக்ளர் அறிவித்தார். இது சரி தானா?
500 ரன்கள் எடுத்திருக்கலாம்
இன்னும் மூன்று நாள் மீதமிருக்கும் நிலையில், மூன்றாம் நாளில் சில ஓவர்கள் வரை கூட எடுத்துக் கொண்டு இந்தியா 500க்கும் மேற்பட்ட ரன்களை முதல் இன்னிங்க்ஸில் அடித்து இருந்தால், ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய அழுத்தமாக இருந்திருக்கும். ஃபாலோ-ஆன் கொடுக்கக் கூட வாய்ப்பு அமைந்திருக்கும்.
டிக்ளர் அறிவிக்க காரணம்
எனினும், 443 ரன்கள் என்பது மெல்போர்ன் களத்துக்கு போதும் என்ற முடிவுக்கு கோலி வந்துள்ளார். இந்த ஆடுகளம் தட்டையாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அதனால், பந்துவீச்சுக்கு பெருமளவு உதவவில்லை. இது கூட கோலி விரைந்து டிக்ளர் அறிவிக்க காரணமாக இருக்கலாம்.
டிராவில் தான் முடியும்
அதே சமயம், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா போலவே நிலைத்து நின்று விக்கெட் இழக்காமல் நிதானமாக ஆடினால், இந்த போட்டி டிராவில் தான் முடியும். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 6 ஓவர்களில் 8 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி இருக்கிறது.
விக்கெட் எடுக்க வேண்டும்
இந்திய பந்துவீச்சு மூன்றாம் நாளில் விரைவாக விக்கெட்களை அள்ளினால் மட்டுமே இந்த போட்டி இந்தியாவுக்கு சாதகமாக மாறும். அதுவரை டிக்ளர் செய்த இந்தியா இந்த போட்டியில் வெல்லும் என கூற முடியாது.