அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 97 பந்துகளாக ஒரு பவுண்டரியே அடிக்க முடியாமல் திணறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணி தரப்பில் களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து விராட் கோலி - ரோகித் சர்மா கூட்டணி அதிரடியாக ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மேக்ஸ்வெல் பந்தில் பவுண்டரி விளாசினார். இதனால் 10 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் இணைந்த விராட் கோலி - கேஎல் ராகுல் கூட்டணி விக்கெட் மட்டும் கொடுத்துவிடக் கூடாது என்று நிதானமாக விளையாடியது. 10வது ஓவருக்கு பின் இருவரும் ஓடியே ரன்கள் சேர்த்தனர். 11 முதல் 20 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் ரன்கள் சேர்த்தனர். மொத்தமாக 11 முதல் 20 ஓவர்கள் வரை 35 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் பவுண்டரி விளாச முயற்சித்தனர். ஆனால் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அனைவரும் சிறுத்தை போல் பாய்ந்து பாய்ந்து பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்தனர். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் முன்னேறாமலேயே இருந்தது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இருவரும் பவுண்டரி அடிக்க முடியாததால், அகமதாபாத் ரசிகர்களின் கரகோஷம் குறைந்து கொண்டே இருந்தது. இறுதியாக மேக்ஸ்வெல் வீசிய 27வது ஓவரில் கேஎல் ராகுல் ஒரு பவுண்டரியை விளாசி தள்ளினார். இதன் மூலமாக இந்திய அணி 97 பந்துகளுக்கு பின் முதல் பவுண்டரியை விளாசியது. இதன்பின் அகமதாபாத் ரசிகர்கள் மீண்டும் தங்களது கரகோஷத்தை தொடங்கினர்.