பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்பின் ஆட்டம் தொடங்கிய நிலையில், 13.2 ஓவர்களுக்குள் 2 முறை கனமழையால் ஆட்டம் தடைபட்டது. இதன்பின் கனமழை தொடர்ந்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றனர். இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2 போட்டிகளில் ஜடேஜா சேர்க்கப்படாத நிலையில், இந்தப் போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதன்பின் ரோஹித் சர்மா பேசுகையில், முதலில் பவுலிங் செய்ய விரும்புகிறோம். ஏனென்றால் கொஞ்சம் வானம் மேகமூட்டமாக இருப்பதோடு, பிட்சிலும் புற்கள் இருக்கின்றன. அதனால் பவுலிங் செய்ய விரும்புகிறோம். கடந்த 2 போட்டிகளிலும் இரு அணிகளும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறோம். இந்த ஆட்டம் எங்களுக்கு முக்கியமானது. எங்களிடம் இருந்து எப்படியான ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறதோ, அப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.
ஆட்டத்தின் முக்கியமான தருணங்களை வெல்ல முயற்சிப்போம். 2வது டெஸ்டில் அதனை எங்களால் செய்ய முடியவில்லை. அதேபோல் ஆட்டம் செல்ல செல்ல பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவும். இந்த போட்டிக்கான பிளேயிங் லெவனை பொறுத்தவரை அஸ்வின், ஹர்சித் ரஆணா இருவரும் நீக்கப்பட்டு ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கம்மின்ஸ் பேசுகையில், நாங்களும் பவுலிங்கையே தேர்வு செய்திருப்போம். இதுவரை சிறந்த டெஸ்ட் தொடராக அமைந்துள்ளது. சிறப்பாக தயாராகி இருக்கிறோம். அடிலெய்டு டெஸ்ட் போட்டி முன்னதாக முடிவடைந்ததால், இங்கு வந்து தயாராகுவதற்கு போதுமான நேரம் கிடைத்தது. பிளெயிங் லெவனை பொறுத்தவரை போலண்ட்-க்கு பதிலாக ஹேசல்வுட் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆட்டம் தொடங்கிய போது 5.3 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் சுமார் 20 நிமிடங்கள் வரை ஆட்டம் தடைபட்ட நிலையில், பின்னர் ஆட்டம் தொடங்கப்பட்டது. இதன்பின் மீண்டும் 13.2 ஓவர்களின் போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் முதல் நாள் ஆட்டம் நடக்குமா என்று சந்தேகத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதற்கேற்ப கனமழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, நேதன் மெக்ஸ்வீனி, லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், நேதன் லயன், ஹேசல்வுட்