பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா மற்றும் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இருவரும் நீக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் போது "காபாவுக்கு வந்து பார்" என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் இந்திய அணியின் அஸ்வினிடம் சவால் விட்டு வாங்கி கொண்டார். காபா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி புதிய வரலாறு படைத்ததோடு, 34 ஆண்டுகளாக அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி செய்து வந்த ஆதிக்கத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தது.

இதுவரை காபா மைதானத்தில் நடைபெற்ற 66 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி 42 போட்டிகளில் வென்றிருக்கிறது. மொத்தமாக 10 போட்டிகளில் மட்டுமே தோல்வியை கண்டுள்ளது. இதனால் காபா மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவது எளிதாக இருக்கப் போவதில்லை. அதிலும் கடந்த முறை காபாவில் பட்ட அவமானத்திற்கு ஆஸ்திரேலியா அணி பழிதீர்க்க தீவிரமாக இருக்கும்.
இதனால் இந்திய அணி வீரர்கள் கொஞ்சம் கவனத்தை திசை மாற்றினாலும், ஆஸ்திரேலியா அணி எளிதாக வென்றுவிடும். இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையும் என்பது குறித்த விவாதங்கள் ரசிகர்களிடையே தொடங்கியுள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை காபா டெஸ்ட் போட்டியில் 2 மாற்றங்களை செய்ய வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா மோசமாக செயல்பட்டிருந்தார். அதேபோல் அவரின் தன்னம்பிக்கையையும் ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்கள் மொத்தமாக குறைத்துவிட்டனர்.
அதனை வலைப்பயிற்சியிலேயே உணர்ந்ததாக சில விமர்சகர்கள் கூறியிருந்தனர். இதனால் ஹர்சித் ராணாவின் இடத்தில் இந்திய அணியின் ஆகாஷ் தீப் களமிறங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்றைய பயிற்சியின் போது ஆகாஷ் தீப் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டு பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.
அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் மிகச்சிறப்பாக செயல்பட்டார். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த பங்களிப்பை அளித்த போது, 2வது டெஸ்ட் போட்டிக்கு அஸ்வின் கொண்டு வரப்பட்டார். தற்போது காபாவில் வாஷிங்டன் சுந்தர் ஏற்கனவே விளையாடிய அனுபவத்துடன் இருக்கிறார்.
இதனால் அஸ்வினின் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பேட்டிங் வரிசையிலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக வரவுள்ளார். இதனால் கேஎல் ராகுலை மீண்டும் நம்பர் 6 இடத்தில் களமிறக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் பிரடிக்ஷன்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ்