பெங்களூரு: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா எப்படி அவசரப்பட்டு ஆட்டமிழந்து வெளியேறினாரோ, அதேபோல் இளம் தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலும் ஆட்டமிழந்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மேக்ஸ்வெல் வீசிய பந்தில் அவசரப்பட்டு 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அந்த ஓவரில் ஏற்கனவே 10 ரன்களுக்கு மேலாக குவித்திருந்தும், மீண்டும் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு அவசரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ரோகித் சர்மா செய்த தவறை செய்துள்ளார். 5வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் தீபக் சஹர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டார்.
இதன்பின் இந்திய அணிக்காக வழக்கம் போல் ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 3 ஓவர்களில் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே குவிக்கப்பட்டிருந்த நிலையில், 4வது ஓவரை வீச பெஹ்ரண்டார்ஃப் வந்தார். அந்த ஓவரின் 2வது பந்தில் ருதுராஜ் பவுண்டரி அடித்து, அதிரடியாக தொடங்கினார்.
இதன்பின் ஸ்ட்ரைக்கில் வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு குறைந்த வேகத்தில் ஷார்ட் பால் ஒன்றை வீசினார் பெஹ்ரண்டார்ஃப். அந்த பந்தை புல் ஷாட் மூலமாக சிக்சருக்கு விளாசி அசத்த, அந்த பந்து சுமார் 90 மீட்டர் தூரம் சென்று விழுந்தது. பின்னர் அடுத்த பந்தை நக்குல் பாலாக வீசப்பட்ட, அதனை ஸ்ட்ரைட் திசையில் பவுண்டரி அடித்து அசத்தினார் ஜெய்ஸ்வால். இதன் மூலம் அந்த ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது.
ஆனாலும் கடைசி பந்தில் மீண்டும் சிக்சர் அடிக்க முயன்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை பறிகொடுத்தார். கடந்த முறை குறைந்த வேகத்தில் ஷார்ட் பாலை வீசிய ஜெய்ஸ்வால், இம்முறை கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் உடல் பகுதியில் ஷார்ட் பாலை வீசினார். இதனை கணிக்காமல் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் அவசரப்பட்டு 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.