|
ஜடேஜா ஃபீல்டிங் செய்தார்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா அணியில் இடம் பெறவில்லை. எனினும், பல முறை மற்ற வீரர்களுக்கு மாற்று வீரராக பீல்டிங் செய்தார். அப்படி நான்காம் நாள் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த போது இஷாந்த் சர்மாவுக்கும், அவருக்கும் இடையே பீல்டிங் நிற்கும் இடம் பற்றி ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
உரசல் மற்றும் வாக்குவாதம்
இதற்கு பின் வந்த இடைவேளையின் போது ஜடேஜா - இஷாந்த் களத்தின் நடுவே சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் நேருக்கு நேர் உரசிக் கொண்டு நின்றனர். இஷாந்த் ஜடேஜாவை நோக்கி சுட்டு விரலை காட்டி பேசினார்.
ஷமி தலையிட்டார்
அப்போது முஹம்மது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலையிட்டு இருவரையும் பிரித்து விட்டனர். அப்போதும் இஷாந்த் சர்மா அமைதியடையாமல், எகிறினார். பின்னர், ஷமியிடம் என்ன நடந்தது என்பது பற்றி கூறினார்.
அடுத்த நாள் வெளியானது
இந்த காட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாலும் அன்றைய தினம் நேரலையில் இது ஒளிபரப்பாகவில்லை. ஐந்தாம் நாள் அன்று இதை வெளியிட்டது ஆஸ்திரேலியாவில் இந்த போட்டியை நேரலை செய்து வரும் ஃபாக்ஸ் தொலைக்காட்சி.
பேசி சரி செய்ய வேண்டும்
இந்திய அணிக்குள் ஏதேனும் மனக்கசப்பு இருந்தால் அது அறைக்குள் வைத்து பேசி சரி செய்ய வேண்டும். அதை விடுத்து களத்தில் ஜடேஜாவும், இஷாந்தும் வாக்குவாதம் செய்து விரலை காட்டி பேசிக் கொண்டது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மூத்த வீரர்கள் இப்படி செய்யலாமா?
ஜடேஜாவுக்கு டெஸ்ட் அணியில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், ஜடேஜா இருந்திருந்தால் இந்தியா இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றிருக்கும் என்ற பேச்சும் உள்ளது. இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி வருகிறார். இஷாந்த் சர்மா மற்றும் ஜடேஜா இருவருமே தற்போதைய இந்திய அணியில் முக்கிய மூத்த வீரர்கள். அப்படி இருக்கும் நிலையில், இருவரும் இப்படி நடந்து கொண்டுள்ளனர்.
ஆஸி. ஊடங்கங்கள் பெரிதாக்கும்
பிசிசிஐ இவர்கள் இருவர் மீதும் ஏதும் நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியவில்லை. முக்கியமாக ஆஸ்திரேலிய ஊடங்கங்கள் இதை ஊதி பெரிதாக்க நிறைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே, கோலி தேவையில்லாமல் சும்மா இருந்த ஆஸ்திரேலிய அணி கேப்டனை சீண்டி விட்டுள்ளார். எனவே, ஆஸ்திரேலிய ஊடகங்கள் கையில் ஏதாவது சிக்காதா? என காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதன் பின் விளைவுகள் என்ன என வரும் நாட்களில் தெரிய வரும்.