பிரிஸ்பேன்: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் இளம் வீரரான ஆகாஷ் தீப்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று புஜாரா அறிவுறுத்தியுள்ளார். முதல் 6 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவாலளிக்கும் லெந்தில் பும்ரா, சிராஜ் பவுலிங் செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில், திடீரென மழையால் நிறுத்தப்பட்டது. இதன்பின் மழை தொடர்ந்து நிற்காமல் பெய்ததால், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாள் இறுதியில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை சேர்த்து களத்தில் உள்ளது.

இந்திய அணி தரப்பில் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய மூவரும் இணைந்து 13.2 ஓவர்களை வீசியுள்ளனர். இதில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த போது, பிட்சில் ஸ்விங் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் பும்ரா மற்றும் சிராஜ் இருவரின் பந்துகளும் கொஞ்சம் கூட ஸ்விங்காகவில்லை. ஸ்டம்ப் மைக்கில் பும்ரா பிட்சில் ஸ்விங் இல்லை என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே இந்திய அணியின் பும்ரா மற்றும் சிராஜ் இருவரின் லைன் மற்றும் லெந்த் தவறு என்று வர்ணனையாளர்கள் விமர்சித்து வந்தனர். இதுகுறித்து இந்திய வீரர் புஜாரா பேசுகையில், இளம் வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப்பிடம் இருந்து பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். சரியாக 5 மீட்டர் லெந்த்-ல் பவுலிங் செய்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுத்துள்ளார்.
ஆனால் பும்ரா மற்றும் சிராஜ் இருவராலும் அதனை செய்ய முடியவில்லை. அவர்கள் கூடுதல் ஃபுல் லெந்த், ஷார்ட் லெந்த் அல்லது லெக் ஸ்டம்ப் லைனிலேயே வீசிக் கொண்டிருந்தனர். ஆஸ்திரேலியா பிட்ச்களில் 6 மீட்டர் லெந்தில் பவுலிங் செய்வது சரியாக இருக்காது. பெர்த் டெஸ்ட் போட்டியில் பும்ரா, சிராஜ் இருவருமே அவர்களின் லெந்தை விரைவாக பிடித்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆனால் அடிலெய்டு டெஸ்ட் மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் அவர்களின் லெந்தை பிடிக்க முடியவில்லை. இந்திய அணியின் 13 ஓவர்களை இரண்டாக பிரித்து பார்க்க வேண்டும். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் பவுலிங்கை பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் முதல் 6 ஓவர்களில் வீசவில்லை. ஆனால் 2ஆம் பாதி பவுலிங்கில் முன்னேற்றம் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் கவாஜா மற்றும் மெக்ஸ்வீனி இருவரும் போதுமான பந்துகளை விளையாடி செட்டிலாகியுள்ளனர். தற்போது மழையால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால், 2வது நாளில் மீண்டும் புதிதாக பேட்டிங்கை தொடங்குவார்கள். இதனை பயன்படுத்தி இந்திய அணி பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.