பிரிஸ்பேன்: இந்திய அணியின் சிராஜ், ஆகாஷ் தீப் உள்ளிட்டொரிடம் இருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்ற விமர்சனம் குறித்து ஜஸ்பிரிட் பும்ரா விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணியில் எந்த வீரரையும் குற்றம் சொல்லி யாருக்கும் பழக்கம் கிடையாது என்று கூறிய அவர், இந்திய பவுலிங் யூனிட்டில் ஒரு மாற்றம் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மண்ணில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை ஜஸ்பிரிட் பும்ரா படைத்துள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் பிரெட் லீ மற்றும் ரிச்சர்ட் ஹார்ட்லி இருவருக்கும் பின் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்த பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் மட்டும் பும்ரா 5 இன்னிங்ஸ்களில் 18 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஆனால் மற்ற இந்திய பவுலர்களில் சிராஜ் 11 விக்கெட்டுகளையும், ஹர்சித் ராணா 4 விக்கெட்டுகளையும், நிதீஷ் குமார் ரெட்டி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
பும்ரா ஒரு பவுலராக 18 விக்கெட்டுகளையும், மற்ற இந்திய பவுலர்கள் இணைந்து 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர். இதனால் இந்திய அணியின் பும்ராவுக்கு சக பவுலர்களிடம் இருந்து ஆதரவு கிடைப்பதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து இந்திய அணியின் பும்ரா பேசுகையில், இந்திய அணி வீரர்களிடையே யார் மீதும் குற்றம் சுமத்தும் பழக்கம் கிடையாது.
நீ இதனை செய்தாய், இப்படி செய்தாய் என்ற பேச்சிற்கே இடமில்லை. இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் ஒரு மாற்றம் நடந்து வருகிறது. அதேபோல் ஆஸ்திரேலியா மைதானங்களில் விளையாடுவது கூடுதல் சவால் நிறைந்த ஒன்று. அதனால் சக பவுலர்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறேன். அவர்கள் கற்றுக் கொண்டு, அடுத்தக் கட்டத்திற்கு நிச்சயம் முன்னேறுவார்கள்.
ஏனென்றால் இதனை ஒரு பயணமாக பார்க்கிறேன். விமர்சகர்களின் கருத்தை மூளைக்கு கொண்டு செல்லும் பழக்கம் எனக்கு கிடையாது. யாரின் கருத்தையும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டேன். அனைத்து கேள்விகளுக்கும் என்னிடம் மட்டுமே பதிலை தேடுவேன். களத்தில் சிறப்பாக செயல்பட்டு பதில் கொடுக்க முயற்சிப்பேன்.
இறுதியாக முடிவு என்ன என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் என்னிடம் இருக்கிறது. இந்திய அணியில் 11 வீரர்கள் விளையாடுகிறார்கள். அதனால் அனைத்து விஷயங்களையும் நானே செய்ய வேண்டும் என்று எதுவும் கிடையாது. ஏற்கனவே சொன்னதை போல், இது ஒரு புதிய அணி. அனைவரும் தங்களின் ஆட்டத்தை உணர்ந்து, முன்னேற்றம் அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.