சிட்னி: இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டு இருப்பதால் அவரால் அடுத்த சில நாட்களுக்கு விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அவரது முதுகில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை மிகவும் தீவிரமானது என தற்போது ஒரு தகவல் கசிந்து உள்ளது.
அவரால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது எனவும் கூறப்படுகிறது. அப்படி என்றால் 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் அவரால் பங்கேற்க முடியாது எனக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவர் அதிக ஓவர்களை வீசியது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 10 ஓவர்கள் மட்டுமே வீசினார். அதன் பின் முதுகில் ஏற்பட்ட வலியின் காரணமாக மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்து வீசவில்லை.
இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்டு உள்ள பிரச்சனை தீவிரமானது என தெரிய வந்துள்ளது. அது பற்றி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் பிரெட் லீ தான் முதலில் பேசி உள்ளனர். அவர்களுக்கு அவருக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்சனை என்ன என்பது தெரிந்ததால் தான் மிக உறுதியாக அதைப் பற்றி வெளியில் பேசி இருக்கிறார்கள்.
ஆனால், பும்ரா விவகாரம் குறித்து பிசிசிஐ அமைதி காத்து வருகிறது. இதற்கு முன்பு முகமது ஷமி விவகாரத்திலும் இதே போல தான் நடந்தது. முகமது ஷமிக்கு என்ன விதமான காயம் ஏற்பட்டுள்ளது என்பதை பிசிசிஐ நீண்ட காலமாக வெளி உலகத்திற்கு தெரிவிக்கவில்லை. சுமார் ஆறு மாதங்களுக்கு பின்னரே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
முகமது ஷமி ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அவருக்கு மீண்டும் முழங்காலில் வீக்கம் ஏற்பட்டது, அதனால், அவரால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.