பிரிஸ்பேன்: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஒவ்வொரு முறை பவுலிங் செய்ய வரும் போது விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபி இன்னும் பாதி கூட முடிவடையாத சூழலில், இந்திய அணிக்கு சிக்கலில் மாட்டிவிட்டதாகவும் எச்சரித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2வது நாள் ஆட்டம் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 405 ரன்களை விளாசியுள்ளது. ட்ராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் விளாசி அசத்தினர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரிட் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சம்பவம் செய்தார்.

இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 5 இன்னிங்ஸ்களில் பவுலிங் செய்துள்ள நட்சத்திர வீரர் பும்ரா 2 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது உட்பட மொத்தமாக 17 விக்கெட்டுகளை தூக்கி இருக்கிறார். இவருக்கு உதவி செய்யும் வகையில் மற்ற இந்திய பவுலர்கள் செயல்படாதது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பும்ரா மட்டுமே தனியாளாக போராடி வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ரசிகர்களின் விமர்சனம் இந்த விவகாரத்தில் உண்மையாகவே அமைந்துள்ளது. ஏனென்றால் இந்த டெஸ்ட் தொடரில் பும்ரா 79 ஓவர்கள் வீசி 17 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். மறுபுறம் சிராஜ், ஆகாஷ் தீப், ஹர்சித் ராணா, அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோர் இணைந்து 222.5 ஓவர்கள் வீசி 20 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட 6 பவுலர்களுக்கு செய்து வரும் பணியை பும்ரா தனியாக நின்று செய்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசுகையில், பும்ரா ஒவ்வொரு முறை பவுலிங் செய்ய வரும் போதும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் இன்னும் பார்டர் கவாஸ்கர் தொடரின் பாதியை கூட எட்டவில்லை.
அதற்குள் இந்திய அணி இப்படியொரு நிலையில் உள்ளது. இன்னும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக் கூடிய ஒரேயொரு இந்திய பவுலராக பும்ரா மட்டுமே இருக்கிறார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இதனை மட்டுமே பார்க்க போகிறோம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அனுபவ வீரரான முகமது சிராஜ் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் தொடர்ந்து திணறி வருகிறார். ஒரு பக்கம் இருந்து அழுத்தம் கொடுத்தாலும், மறுபக்கம் 3வது பவுலரின் உதவி இல்லாமல் இந்திய அணி திண்டாடி வருகிறது. இதனால் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டால் இந்திய அணியின் கதி அவ்வளவு தான் என்று ரசிகர்களும் எச்சரித்து வருகின்றனர்.