பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் நேதன் மெக்ஸ்வீனி இதுவரை விளையாடியுள்ள 5 இன்னிங்ஸ்களில் 4 முறை பும்ராவின் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். 3வது போட்டிக்கு முன்பாக பும்ராவுக்கு சவால்விட்டிருந்த நிலையில், மெக்ஸ்வீனியை இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் மெக்ஸ்வீனி, பும்ராவின் பவுலிங்கை எவ்வளவு அதிகம் எதிர்கொள்கிறேனோ, அவ்வளவு சிறப்பாக வரும் காலங்களில் அவர் பந்தில் ரன்களை குவிப்பேன். காபா டெஸ்டில் நிச்சயம் பும்ராவுக்கு பதிலடி கொடுப்பேன் என்று சவால் அளித்திருந்தார்.

ஆஸ்திரேலியா அணிக்காக மெக்ஸ்வீனி இந்த டெஸ்ட் தொடரில் தான் அறிமுகமாகி இருந்தார். அறிமுக வீரரைக் கொண்டு பும்ராவுக்கு சவால்விட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பும்ராவை எளிதாக கையாண்ட மெக்ஸ்வீனி, விக்கெட்டை பறிகொடுக்காமல் தப்பித்துவிட்டார்.
இந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் காலை தொடங்கியது. இதில் பும்ரா வீசிய முதல் ஸ்பெல்லிலேயே மெக்ஸ்வீனி 49 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதுவரை 5 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள மெக்ஸ்வீனி, பும்ராவிடம் மட்டும் 4 முறை விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறி இருக்கிறார்.
பும்ராவை எப்படி கையாள்வது என்றே தெரியாமல் மெக்ஸ்வீனி களத்தில் பேட்டிங் செய்வது தெரிய வந்துள்ளது. ஏனென்றால் இதுவரை பும்ராவின் 52 பந்துகளை எதிர்கொண்டுள்ள மெக்ஸ்வீனி 12 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளதோடு, 4 முறை அவுட்டாகி இருக்கிறார். இதனால் மெக்ஸ்வீனியை இந்திய ரசிகர்கள் சவால்விடும் போது ஜாக்கிரதையாக விடவேண்டும் தம்பி என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களை பும்ரா வேட்டையாடி வருகிறார் என்றே சொல்ல வேண்டும். ஆஸ்திரேலியா தொடக்க வீரர்களாக விளையாடி வரும் கவாஜா - மெக்ஸ்வீனி இருவருக்கும் இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை 121 பந்துகளை பும்ரா வீசி இருக்கிறார். இதில் வெறும் 30 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.