மும்பை: இந்திய அணியின் ஒரு பேட்ஸ்மேன் கூட 50 பந்துகளை எதிர்கொண்டு விளையாடவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு செஷன் கூட விக்கெட் கொடுக்காமல் விளையாட முடியவில்லை என்று கூறியுள்ள அவர், இந்திய பேட்ஸ்மேன்கள் தான் தோல்விக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்துள்ள ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 295 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா அணி, அதற்கு அப்படியே தலைகீழான ஆட்டத்தை அடிலெய்டு மைதானத்தில் வெளிப்படுத்தி இருக்கிறது.

கேப்டன் ரோஹித் சர்மா கம்பேக் கொடுத்துள்ள போது, இந்திய அணி தோல்வியடைந்திருப்பது கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான செயல்பாடுகளே காரணம் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அனைத்து பேட்ஸ்மேன்களும் கொஞ்சம் கூட பொறுமை இல்லாமல் ஆடியதே, தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், நான் எங்கே தவறு செய்தோம்? இதுதான் மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்விக்கான உண்மையான பதில் பேட்டிங்கில் சொதப்பியது தான். ஒருமுறை மட்டுமல்லாமல், இரு இன்னிங்ஸ்களிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். அடிலெய்டு மைதானத்தில் முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது சரியான முடிவு தான்.
அதன்பின் முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. சில நேரங்களில் இப்படி நடக்கும். அதற்கு விமர்சிக்க தேவையில்லை. ஆனால் 2வது இன்னிங்ஸின் போது பிட்ச் கிட்டத்தட்ட ஃபிளாட் பிட்சாக இருந்தது. அந்த இன்னிங்ஸிலும் 175 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகி இருக்கிறது. 2 இன்னிங்ஸிலும் 80 ஓவர்கள் கூட முழுமையாக விளையாட முடியவில்லை.
அதுதான் இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்சனையாகும். எந்த வீரரும் குறைந்தது 50 பந்துகளை கூட எதிர்கொள்ளவில்லை. இந்திய அணியில் உள்ள எந்த பேட்ஸ்மேனை காட்டியும் இவரால் 80 முதல் 100 பந்துகளை வரை விளையாடுவார் என்று சொல்ல முடியவில்லை. அரைசதம் அடிப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்களால் 50 பந்துகளை கூட எதிர்த்து நின்று விளையாட முடியவில்லை.
50 பந்துகள் கூட விளையாட முடியாத அளவிற்கான பிட்ச் இது அல்ல. அதேபோல் பேட்ஸ்மேன்களால் தப்பிக்கவே முடியாத அளவிற்கான பிட்சும் கிடையாது. ஒரு செஷன் கூட இந்திய அணியால் விக்கெட் கொடுக்காமல் விளையாட முடியவில்லை. அப்படி விளையாடினால் மட்டுமே இந்திய அணியால் வெற்றியை பற்றி சிந்திக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.