பெங்களூரு: இரு நாடுகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்த சாதனையை ரவி பிஷ்னாய் சமன் செய்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார்.

இதுகுறித்து ரவி பிஷ்னாய் பேசுகையில், இந்த தொடரின் முதல் போட்டியில் நான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதன்பின் எனது பந்துவீச்சிற்கான திட்டத்தை உறுதி செய்தேன். ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பவுலிங் செய்ய வேண்டும் என்ற எளிய திட்டத்துடன் வீசினேன். அது எனக்கு பயனளித்தது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை பொறுத்தவரை வேறு ஆடுகளம், புதிய சவால் இருக்கும். அந்த சூழலுக்கு வேகமாக தகவமைத்து கொண்டு விளையாட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த டி20 தொடரில் ரவி பிஷ்னாய் இந்திய அணிக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ அப்போதெல்லாம் விக்கெட்டை வீழ்த்தினார். குறிப்பாக இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பவர் பிளே ஓவர்களில் சொதப்பிய நிலையில், உடனடியாக பவர் பிளேவில் அட்டாக்கில் வந்து முதல் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் ரவி பிஷ்னாய்.