அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டது தெரிய வந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இதனால் அகமதாபாத் மைதானத்தை சுற்றி இப்போது முதலே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்த போட்டியில் வென்று 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலககோப்பை இறுதிப்போட்டிக்கு முன் ரோகித் சர்மா பேசுகையில், ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருப்பாரா என்பது நாளை தான் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஏனென்றால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். அதன்பின் அஸ்வின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை.
ஆனால் உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தின் நம்பர் 5 பிட்சில் விளையாடப்படவுள்ளது. இதனால் இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீசினால் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அச்சத்தில் நடுங்குவார்கள். இவரை எதிர்கொள்வதற்காக ஆஸ்திரேலிய அணி ஸ்பெஷல் பயிற்சியெல்லாம் எடுத்தது.
அதுமட்டுமல்லாமல் டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இருவருமே இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் களமிறங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இவர்கள் இருவருமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு சவாலாக இருந்தார்கள். அவர்களை கட்டுப்படுத்த அஸ்வின் தேவை என்ற நிலை உள்ளது.
இதனிடையே நேற்று நடைபெற்ற இந்திய அணிக்கான வலைபயிற்சியில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுப்பார் என்று ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.