
டி20 கேப்டன்சி
கடந்த மூன்று ஆண்டுகளில் விராட் கோலி ஓய்வு எடுத்த நேரங்களில் ரோஹித் சர்மா இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அப்போது இந்திய அணி வெற்றிகளை குவித்தது. இதை அடுத்து அவரது கேப்டன்சி பாராட்டுக்களைப் பெற்றது.

2019 உலகக்கோப்பை
இந்த நிலையில், 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறிய போது கேப்டன்சியில் மாற்றம் வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அப்போது தான் விராட் கோலி முதன்முறையாக அழுத்தத்தை சந்தித்தார்.

கோலி தடுமாற்றம்
அப்போது ரோஹித் சர்மாவை சமாளித்த விராட் கோலி, 2020 ஐபிஎல் தொடரில் மீண்டும் சிக்கினார். கோலி தலைமை தாங்கிய பெங்களூர் அணி தட்டுத் தடுமாறி பிளே-ஆஃப் வந்து அதிலும் தோல்வி அடைந்து வெளியேறியது.

ஐந்து கோப்பைகள்
ஆனால், ரோஹித் சர்மா தலைமை தாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 2020 ஐபிஎல் கோப்பை வென்றது. ரோஹித் சர்மா கேப்டன்சியில் மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்றதை அடுத்து மீண்டும் அவரை இந்திய அணியின் கேப்டனாக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது.

கேப்டன்சி மாற்றம் வேண்டும்
விராட் கோலியின் மோசமான ஐபிஎல் செயல்பாட்டை சுட்டிக் காட்டி அவர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். ரோஹித் சர்மா அணியின் கேப்டனாக வேண்டும் என கவுதம் கம்பீர் போன்ற சிலர் கூறி வந்தனர்.

ரோஹித் சர்மா நீக்கம்
ஐபிஎல் தொடரின் போதே இதுதான் நடக்கும் என்றோ என்னவோ, ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள மூன்று கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஏற்பட்ட சிறிய காயத்தை காரணமாக வைத்து அவரை நீக்கி இருந்தது பிசிசிஐ.

இரண்டு அணிகளில் இல்லை
அதன் பின் ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றதால் அவரை டெஸ்ட் தொடரில் மட்டும் சேர்த்தது பிசிசிஐ. எனினும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை. இது அவருக்கு வைக்கப்பட்ட செக் ஆக கருதப்படுகிறது.

டெஸ்ட் அணியில் மட்டுமே
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ரோஹித் சர்மா ஆட உள்ளார். டெஸ்ட் அணியில் விராட் கோலியின் கேப்டன்சிக்கு எந்த சிக்கலும் இல்லை. அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடாத போது கூட துணை கேப்டன் ரஹானே தான் கேப்டன் பொறுப்பை ஏற்பார்.

பேச்சே இருக்காது
ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் ரோஹித் சர்மா ஆடாவிட்டால் அவருக்கும், கோலிக்கும் இடையே எந்த ஒப்பீடும் இருக்காது. இதை அடுத்து ஆஸ்திரேலிய தொடர் முடியும் வரை விராட் கோலி - ரோஹித் சர்மா கேப்டன்சி ஒப்பீடு பற்றிய பேச்சே இருக்காது.

அடுத்த ஐபிஎல்
இனி மீண்டும் அடுத்த 2021 ஐபிஎல் தொடரில் தான் விராட் கோலி - ரோஹித் சர்மா கேப்டன்சி குறித்த விவாதம் எழும். இதன் மூலம், ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் விராட் கோலி செக் வைத்துள்ளதாகவே கருத வேண்டி உள்ளது.

துணை கேப்டன் மாற்றம்
இதில் மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளது. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆட உள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் துணை கேப்டன் பதவி கேஎல் ராகுலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமானதா? இல்லை நிரந்தரமானதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications