கடைசி ஒருநாள் தொடர்
உலகக்கோப்பைக்கு முன் இந்தியா ஆடவுள்ள கடைசி ஒருநாள் தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற உள்ள தொடர் தான். இந்த தொடரில் இந்திய அணி கடைசி கட்டமாக 15 உத்தேச வீரர்களை முடிவு செய்ய உள்ளது.
டி20 தொடரில் பரிசோதனை
ஒருநாள் தொடருக்கு முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மாற்று விக்கெட் கீப்பர் மற்றும் மாற்று துவக்க வீரர் இடங்களுக்கான சரியான வீரர்களை பயன்படுத்தி பார்க்க உள்ளது.
மாற்று வீரர்கள் தேர்வு
அதற்காக ரோஹித் சர்மா மற்றும் தோனி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு துவக்க வீரர் இடத்திற்கு ராகுல் பயன்படுத்தப் பட உள்ளார். அதே போல, மாற்று விக்கெட் கீப்பராக தோனிக்கு பதில், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் பயன்படுத்தப் பட உள்ளனர்.
பரிசோதனை முயற்சிகள்
கடந்த ஆறு - ஏழு மாதங்களாக இந்திய அணியில் பரிசோதனை முயற்சிகள் மட்டுமே நடந்து வந்த நிலையில், டி20 தொடருடன் இந்தியா பரிசோதனை முயற்சிகளை முடித்துக் கொள்ளும் என்றும், ஒருநாள் தொடரில் முழு பலத்துடன் இந்தியா இறங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் புதிய நடைமுறை
இந்தியா, ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் உலகக்கோப்பை அணியை தேர்வு செய்து விடும் என்பதால் யார் யாருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், இந்தியாவின் இந்த நடைமுறை தவறாக செல்லவும் வாய்ப்புள்ளது.
இது சரியா வருமா?
மே இறுதியில் துவங்க உள்ள உலகக்கோப்பைக்கு மூன்று மாதம் முன்னதாக அணியை தேர்வு செய்வது சரியாக இருக்குமா? என்ற கேள்வியும் உள்ளது. இது மட்டுமில்லாமல், உலகக்கோப்பை அணியில் இடம் பெறப் போகும் இந்திய வீரர்கள் அனைவரும் உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ஆடுவார்கள்.
காயம் ஏற்பட்டால்..
ஐபிஎல் தொடரில் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு உலகக்கோப்பையில் ஆட முடியாத சூழல் வந்தால், அணியில் அந்த வீரரின் இடத்தை யார் நிரப்புவார்கள். அது அணியின் சமநிலையை பாதிக்காமல் இருக்குமா? என்ன நடக்கிறது என பார்க்கலாம்.