ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் குவித்த நிலையில், இந்தியாவின் பேட்டிங் தடுமாறியது. ஜெய்ஸ்வால் நான்கு ரன்களிலும், கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி மூன்று ரன்னிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் ஆட்டம் இழக்க கே எல் ராகுல் மட்டும் பொறுப்புடன் விளையாடி வந்தார்.

இந்த நிலையில் முதல் மூன்று நாள் ஆட்டங்கள் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோருடன் நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ராகுல் 33 ரன்களும், ரோகித் சர்மா 0 ரன்களுடனும் நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில இன்னிங்ஸ்களாக தடுமாறி வருகிறார்.
ரோகித் சதம் அடித்து 13 இன்னிங்ஸ்கள் ஆகிறது. அரைசதம் அடித்து 7 இன்னிங்ஸ்கள் ஆகிறது கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 52 ரன்கள் எடுத்த நிலையில், அதன் பிறகு 0,8,18,11,3,6 ரன்களை தான் அடித்து இருந்தார். இதனால் இந்த டெஸ்ட் போட்டி ரோகித் சர்மாவின் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஏனென்றால் இந்திய அணி தோல்வியை தவிர்க்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஃபாலோ ஆனையாவது தவிர்க்க வேண்டும்.
இதனால் ரோகித் சர்மா இன்று ஒரு அரை சதம் அடித்து இருந்தாலும் அது இந்திய அணியின் தோல்வியை தவிர்க்க ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.ராகுலும் ரோஹித் சர்மாவும் இந்திய அணியை மீட்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் ஷர்மா வழக்கம் போல் கம்மின்ஸ் பந்தில் 10 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். ரோகித் சர்மாவின் விக்கெட் மிகப்பெரிய பின்னடைவை இந்தியாவுக்கு ஏற்படுத்தி விட்டது. கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் ரோகித் சர்மா தொடர்ந்து தடுமாறி வருவதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.