பிரிஸ்பேன்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபிளாட் ட்ராக்கில் மட்டுமே ரன்களை விளாசுவார் என்று தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் டேரில் கலினன் கிண்டல் செய்துள்ளார். ரோஹித் சர்மாவிடம் ஃபிட்னஸ் பிரச்சனை இருப்பதாக கூறிய அவர், பவுன்சர் பந்துகளை எதிர்கொள்வதிலும் சில சிக்கலை சந்திப்பதாக விமர்சித்துள்ளார்.
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 92 ரன்களை மட்டுமே எடுத்து ரோஹித் சர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன்பின் அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அவர், 3 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்து கொஞ்சம் ஸ்விங்காகினாலும் ரோஹித் சர்மா எளிதாக விக்கெட்டை பறிகொடுத்துவிடுகிறார். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்து தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் டேரில் கலினன் பேசுகையில், வெளிநாடுகளில் ரோஹித் சர்மா ஒருமுறை கூட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு 2 முறை வந்த போதும், அவரால் ரன்களை குவிக்க முடிந்ததில்லை. ரோஹித் சர்மாவுக்கு சொந்த மண்ணில் மட்டுமே நல்ல பேட்டிங் சராசரி இருக்கிறது.
அதனால் அவரை ஃபிளாட் ட்ராக் வீரராகவே கருதுவேன். அவருக்கு பவுன்ஸ் இருக்கும் பிட்ச்களில் விளையாடுவதில் பிரச்சனை உள்ளது. சவால் நிறைந்த பிட்ச்களில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்துவது எளிதாக இருந்திருக்கிறது. அதேபோல் விராட் கோலியின் ஃபிட்னஸ் மற்றும் ரோஹித் சர்மாவின் ஃபிட்னஸ் இரண்டையும் பாருங்கள். ரோஹித் சர்மாவால் நீண்ட காலம் இனி கிரிக்கெட் விளையாட முடியாது.
அதிக எடையுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஃபிட்னஸ் பிரச்சனை அவரின் ஆட்டத்தையும் பார்க்கிறது. 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ரோஹித் சர்மா போதுமான அளவிற்கு வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்திய அணியில் அவர் வந்த பின், எந்த சாதகமும் ஏற்படவில்லை. நான் கேப்டனாக இருந்திருந்தால், 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவை பிளேயிங் லெவனில் சேர்த்திருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா கேப்டனான பின்னரும் சரி, கேப்டனாவதற்கு முன்பாகவும் சரி.. வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் முழுமையாக விளையாடியதில்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு போட்டிகளை தவறவிட்டிருக்கிறார். அதேபோல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரை கடந்து வேறு எங்கும் ரோஹிஒத் சர்மா ரன்கள் குவித்ததில்லை.
இதனால் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோஹித் சர்மா ரன்களை குவிக்கவில்லை என்றால், அவருக்கு இதுவே கடைசி டெஸ்ட் தொடராக அமையும் என்று பார்க்கப்படுகிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடருக்கு பின் எப்படி புஜாரா மற்றும் ரஹானே இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்களோ, அதேபோல் ரோஹித் சர்மா நீக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.