
ஆஸ்திரேலிய தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நவம்பர் 27 அன்று துவங்க உள்ளது. அதை அடுத்து டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. ஜனவரி இரண்டாம் வரை இந்த போட்டிகள் நடைபெறும்.

ரோஹித் நீக்கம்
இந்த மூன்று தொடர்களுக்கான இந்திய அணியிலும் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை. அவருக்கு ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட தசைப்பிடிப்பை காரணமாகக் காட்டி அவர் அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டார். அது சர்ச்சையை ஏற்படுத்தியது.

உடற்தகுதி உள்ளது
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் பங்கேற்று ஆடினார், தான் முழு உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்தார். பிளே-ஆஃப் சுற்றிலும் பங்கேற்ற அவர், இறுதிப் போட்டியிலும் ஆட உள்ளார்.

ரோஹித் சேர்க்கப்படுவார்
இதை அடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மாவை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பிசிசிஐ. அவர் நவம்பர் 11 அன்று கிளம்ப உள்ள இந்திய அணியுடன் கடைசி நேரத்தில் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது. ஆனாலும், அதில் ஒரு சிக்கல் உள்ளது.

இறுதிப் போட்டி
பிசிசிஐ அவரது உடற்தகுதியை சோதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆடிய போட்டிகள் மட்டுமின்றி, இறுதிப் போட்டியிலும் அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா? என சோதித்த பின்னரே அவரை போட்டிகளில் பங்கேற்க வைப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

ஒருநாள் தொடரில் ஓய்வு
அதன்படி பிசிசிஐ மருத்துவக் குழு கருதினால் முதலில் நடக்க உள்ள ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும். அடுத்து அவர் டி20 தொடரில் பங்கேற்கக் கூடும். எனினும், அதையும் உறுதியாக கூற முடியாது.

டெஸ்ட் தொடர் முக்கியம்
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தான் இந்த சுற்றுப்பயணத்தில் முக்கியமான தொடர். அதில் ரோஹித் சர்மா நிச்சயம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. விராட் கோலி பாதி டெஸ்ட் தொடரில் விலகுவார் என ஒரு தகவல் வலம் வருகிறது.

ரோஹித் பங்கேற்பார்
அந்த நேரத்தில் இந்திய அணியில் பேட்டிங் பலவீனமடைய வாய்ப்பு உள்ளது. அப்போது மற்ற முக்கிய வீரர்கள் அனைவரும் அணியில் இருப்பது அவசியம். எனவே, ரோஹித் சர்மா நிச்சயம் டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications