அஸ்வினை வைத்து ரோகித் சர்மா ஆடிய மைண்ட் கேம்.. குழம்பிப்போன ஆஸ்திரேலியா.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் கடைசி நிமிடங்களில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டுள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அகமதாபாத் மைதானம் சேஸிங் செய்ய உதவியாக இருக்கும் என்பதால், இந்த முடிவை கம்மின்ஸ் எடுத்துள்ளார்.

இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆனால் போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் அகமதாபாத் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், திடீரென ஓய்வறையில் இருந்து வெளியில் வந்து ராகுல் டிராவிட்டிடம் பேசிவிட்டு, பயிற்சியில் ஈடுபட தொடங்கினார்.
இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பதாக பார்க்கப்பட்டது. இதனை ஆஸ்திரேலியாவின் பத்திரிகையாளரான பரத் சுந்தரேசனும் உறுதி செய்திருந்தார். அதேபோல் இன்னொரு பக்கம் சிராஜ் மைதானத்திற்கு தாமதமாக வந்தார். இதனால் இந்திய அணி 2 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது.
ஆனால் டாஸிற்கு முன் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, மைதானத்திலேயே வீரர்களுடன் கடைசி நேர ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனை முடிவில் சிராஜ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் கட்டிப்பிடித்து பாராட்டி கொண்டனர். இதன் மூலமாக இந்திய அணியின் பிளேயிங் லெவன் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வினை கண்டாலே பீதியில் நடுங்குவார்கள். இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பது போல் ஆஸ்திரேலியா அணி வீரர்களை குழப்புவதற்காக எடுக்கப்பட்ட முடிவாக கூட இருக்கலாம். ஏனென்றால் ரோகித் சர்மா மைண்ட் கேம்ஸ் ஆடுவதில் சிறந்த வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, November 19, 2023, 14:05 [IST]
Other articles published on Nov 19, 2023


Click it and Unblock the Notifications