பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா டிஃபென்சிவ் மனநிலையுடன் விளையாட கூடாது என்று ஜாம்பவான் கிரிக்கெட்டரான மேத்யூ ஹெய்டன் அட்வைஸ் கொடுத்துள்ளார். அவர் இரட்டை சதம் விளாசிய போது எப்படியான எனர்ஜியுடன் விளையாடினாரோ, அதே எனர்ஜியை களத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3வது நாள் ஆட்டம் மழை காரணமாக முழுமையாக நடக்காத நிலையில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது. தொடக்க வீரர் கேஎல் ராகுல் 33 ரன்களும், ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே ரோஹித் சர்மா பேட்டிங் ஃபார்மில் இல்லை. அதுமட்டுமல்லாமல் அவரின் ஃபேவரைட் பேட்டிங் வரிசையான தொடக்க வீரராக அல்லாமல், மிடில் ஆர்டரில் விளையாடி வருகிறார். இதனால் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியை மீட்டெடுப்பாரா என்ற சோகம் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் மேத்யூ ஹெய்டன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் ஹெய்டன் பேசுகையில், ரோஹித் சர்மாவை பற்றி சிந்திக்கும் போது, அவர் மிக எளிதாக ரன்களை குவிக்கக் கூடிய பேட்ஸ்மேன். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள இரட்டை சதங்களை பார்த்திருக்கிறேன்.
நாளைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா மீண்டும் அதே எனர்ஜியை கொண்டு வர வேண்டும். நீண்ட நாட்களுக்கு பின் ஆஸ்திரேலியா மண்ணில் களமிறங்கிய ரோஹித் சர்மாவை பார்த்த போது, கொஞ்சம் டிஃபென்சிவாக ஆடினார். ஒரு பேட்டிங் பார்ட்னராக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ரோஹித் சர்மா டிஃபென்சிவ் ஆட்டத்தை பார்க்க விரும்பவில்லை. பந்துக்கு ஏற்ப ஷாட்களை விளையாட வேண்டும்.
அவர் மட்டும் பந்துக்கு ஏற்ப ஷாட்களை ஆடினால், நிச்சயம் அவரின் இயற்கையான ஆட்டம் வெளிப்படும். எனர்ஜி மட்டுமே அவருக்கு பந்தை நோக்கி ஃபிரண்ட் ஃபூட்டில் விளையாட வைக்கும். இந்திய அணியின் பேட்டிங்கை பார்க்கும் போது, அவர்களிடம் இரு அவசரம் தெரிகிறது. காபா மைதானத்தில் ரன்கள் சேர்க்க வேண்டுமென்றால், கொஞ்சம் முயற்சித்து களத்தில் நேரம் செலவிட வேண்டும்.
புதிய பந்தில் இருந்து தப்புவதற்கான வழியை கண்டறிய வேண்டும். அதுவும் நீண்ட நேரம் நிதானமாக விளையாட தேவையில்லை. முதல் 10 ஓவர்களில் தான் அதிகமாக விக்கெட் வீழ்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ரோஹித் சர்மா ஒரு சதம் கூட அடித்ததில்லை. ஆனால் நாளைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா அடித்தால் மட்டுமே, இந்திய அணி தப்பிக்கும்.