சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் ரோஹித் சர்மா பயிற்சியாளர் கவுதம் கம்பீரை நோக்கி ஓடி வந்தார். அவரிடம் பதற்றமாக ஏதோ பேசினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து டாஸ் நிகழ்வின்போது ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் இருந்து விலகி விட்டதாக தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்ட பும்ரா தெரிவித்தார்.
இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்திய அணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறதா? ரோஹித் சர்மா ஒட்டுமொத்தமாக அணியிலிருந்து நீக்கப்பட்டாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் மட்டுமே அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றது. மற்ற மூன்று போட்டிகளிலும் படு சுமாராக ஆடியது. அதிலும் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் ஒருமுறை கூட 10 ரன்களை கூட தாண்டவில்லை.
இதற்கு முந்தைய நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் மோசமாகவே செயல்பட்டு இருந்தார். இதை அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் வலுத்தன. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மெல்போர்னில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்திய வீரர்களை கடுமையாக பேசியதாக தகவல் வெளியானது.
அதை தொடர்ந்து ஐந்தாவது போட்டியில் இருந்து ரோஹித் சர்மா தாமாகவே விலகி விட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் டாஸ் நிகழ்வுக்கு முன் ரோஹித் சர்மா பயிற்சியாளர் கவுதம் கம்பீரை நோக்கி ஓடி வந்தார். அவர் அருகில் தற்காலிக கேப்டனான பும்ரா இருந்தார். அப்போது ரோஹித் சர்மா கம்பீரிடம் பதற்றமாக பேசினார்.
ஆனால், கம்பீர் நிதானமாக அவருக்கு பதில் அளித்து அனுப்பினார். அதன் பின் பும்ரா டாஸ் நிகழ்வின்போது அதை சமாளிக்கும் வகையில், ரோஹித் சர்மா தாமாகவே விலகி விட்டதாகவும், இது அவரது தலைமையின் பண்பை வெளிக்காட்டுவதாகவும், அணியில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் கூறினார். ஆனால், இதை நம்ப மறுத்த ரசிகர்கள் இந்திய அணியில் மிகப்பெரிய அளவில் குழப்பம் இருப்பதாகவும் அதற்கு கவுதம் கம்பீர் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.