பெங்களூரு: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க கிடைத்த வாய்ப்பை ருதுராஜ் கெய்க்வாட் வீணடித்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் இளம் சூப்பர் ஸ்டார் வீரராக உருவெடுத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். சீனியர் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வரும் சூழலில், 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான அரைசதம் அடித்து அசத்தினார்.

தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரில் 4 போட்டிகள் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 213 ரன்களை விளாசி இருந்தார். இதன் மூலமாக இருதரப்பு டி20 தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு ருதுராஜ் கெய்க்வாட்-க்கு கிடைத்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி 231 ரன்கள் சேர்த்திருந்தார். அதன்பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 224 ரன்களை சேர்த்திருந்தார். இவர்கள் இருவரின் சாதனையையும் முறியடிக்க 19 ரன்கள் மட்டும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு தேவையாக இருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.
தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய அவர், 12 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ருதுராஜ் கெய்க்வாய் தவறவிட்டுள்ளார். இருப்பினும் 5 டி20 போட்டிகளில் மொத்தமாக சேர்த்து 223 ரன்கள் சேர்த்ததன் மூலமான, இருதரப்பில் டி20 தொடரில் அதிக ரன்களை விளாசிய 3வது வீரர் என்ற பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் இளம் வீரர் என்பதால், வரும் காலங்களில் நிச்சயம் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக கிடைத்த வாய்ப்பில் தனது திறமையை நிரூபித்துவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.