அகமதாபாத்: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் இந்திய அணி வீரர்கள் கண்ணீருடன் இருந்ததை பார்க்கவே வேதையாக இருந்ததாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணி மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. 2003ஆம் ஆண்டு இறுதிப்போட்டி தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியதற்கு இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பழி தீர்த்துள்ளது.

இந்த தோல்வியால் இந்திய அணி வீரர்கள் களத்தில் கலங்கினர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவி பேசுகையில், இந்திய அணி ஓய்வறையில் வீரர்களை பார்க்கவே கஷ்டமாக உள்ளது. ஒரு பயிற்சியாளராக அவர்களை இப்படி பார்க்கவே முடியவில்லை. ஏனென்றால் உலகக்கோப்பை தொடருக்காக வீரர்கள் அனைவரும் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். ஆனால் இதுதான் விளையாட்டு. சில நேரங்களில் இப்படிதான் நடக்கும்.
சிறந்த கிரிக்கெட்டை ஆடிய அணி வென்றுள்ளது. நிச்சயம் சூரியன் மீண்டும் உதிக்கும். அதேபோல் ஒருநாள் இந்தியாவும் வெல்லும். இந்த தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்கிறோம். நிச்சயம் அனைவரையும் போல் தோல்வியை கடந்து செல்ல வேண்டும். விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை அப்படிதான் இருக்கும். விளையாட்டில் வெற்றி, தோல்வி இரண்டும் இருக்கும். சில நேரங்களில் விளையாட்டு அதிக மகிழ்ச்சியையும் அளிக்கும், சில நேரங்கள் மோசமாக சோகத்தையும் கொடுக்கும்.
சோகமடைந்து விளையாடுவதை நிறுத்த கூடாது. ஏனென்றால் தோல்வியை கண்டால் தான், அதனைவிட பெரிய வெற்றி பெற்று மகிழ்ச்சியடைவோம். அதேபோல் போட்டியை பொறுத்தவரை எப்போது பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றோமோ, அப்போதெல்லாம் விக்கெட்டை பறி கொடுத்தோம். விராட் கோலி, ஜடேஜா, கேஎல் ராகுல் உள்ளிட்டோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 40 ரன்களை குறைவாக எடுத்ததாக பார்க்கிறேன். ஒரு வேளை இலக்கு 280 அல்லது 290 ரன்களாக இருந்திருந்தால் ஆட்டம் வேறு மாதிரி இருந்திருக்கும்.
ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர் மிகச்சிறந்த கேப்டன். அவர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். அதேபோல் ஓய்வறையில் அதிக நேரம் செலவிடுவார். எந்த நேரத்தில் ஆலோசனைக்கு தயாராக இருப்பார். எந்த ஐடியாவாக இருந்தாலும், உரையாட விரும்புவார். இந்த உலகக்கோப்பை தொடருக்காக குடும்பத்துனருடனான நேரங்களை கூட தியாகம் செய்துள்ளார். நாங்கள் அட்டாக்கிங் கிரிக்கெட்டை விளையாட விரும்பினோம். அதற்கேற்றபடி பேட்டிங்கிலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.