அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இதன் மூலமாக 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்தது. இந்திய அணி தோல்வியடைந்த பின், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் மைதானத்திலேயே கண்கலங்கினர்.

இந்த உலகக்கோப்பை தொடரின் தோல்வியில் இருந்தே இந்திய அணி வீரர்கள் வெளி வராமல் இருக்கும் சூழலில், அடுத்ததாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நவ.23ஆம் தேதி முதல் டிச.3ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய அணியின் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, சிராஜ், கேஎல் ராகுல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு உறுப்பினர்கள் அகமதாபாத்தில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த டி20 தொடருக்கான அணி தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய அணியே இந்த டி20 தொடருக்கும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அந்த அணிக்கு பும்ரா தலைமை தாங்கிய நிலையில், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஆசியக் கோப்பை, ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் மற்றும் உலகக்கோப்பை என்று 3 மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த டி20 தொடரில் பிரசித் கிருஷ்ணா, யஷஸ்வி ஜெய்ஷ்வால், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் நிச்சயம் விளையாடுவார்கள் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரின் தயாரிப்பாகவும் இந்த டி20 தொடர் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.