பெங்களூரு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை வென்ற பின் அந்த கோப்பையை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேராக ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா கைகளில் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிய ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார்.

இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்து தோல்வியை சந்தித்தது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும். ரவி பிஷ்னாய் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 31 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட்டை வீழ்த்திய அக்சர் படேலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் 5 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் ரவி பிஷ்னாய் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். இதன்பின் முதல்முறையாக இந்திய அணிக்கு கேப்டன்சி செய்த சூர்யகுமார் யாதவ், கோப்பையை பெற்று கொண்டார்.

கோப்பையை வாங்கிய பின் நேராக இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரிடமும் கோப்பையை கொடுத்து சென்றார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் இந்திய அணிக்கு கேப்டன்சி செய்த வீரர்கள் அனைவரும் எந்த தொடரில் கோப்பையை வென்றாலும் இளம் வீரர்களிடம் முதலில் கொடுத்து கொண்டாடுவார்கள்.
கங்குலி, டிராவிட், தோனி, விராட் கோலி, ரஹானே, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் தொடர்ந்து வந்த பாதையை சூர்யகுமார் யாதவும் பின்பற்றியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் முதல்முறையாக இந்திய அணிக்குள் வரும் வீரர்கள் கோப்பையை வென்றதை கொண்டாட வேண்டும் என்று சின்ன ஆசையை நிறைவேற்றும் வகையிலும் இந்த சம்பவங்கள் பார்க்கப்படுகிறது.