இந்தியா அபார பேட்டிங்
சிட்னியில் நடைபெறும் நான்காவது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் அபாரமாக ரன் குவித்தது. மாயன்க் 77, புஜாரா 193, ஹனுமா 42, ரிஷப் பண்ட் 159* ரன்கள் குவிக்க இந்தியா 7 விக்கெட்களை இழந்து 622 ரன்களை எட்டியது. அத்துடன் தன் முதல் இன்னிங்க்ஸ்-ஐ டிக்ளர் செய்தது இந்தியா.
ஆஸ்திரேலியா 236 ரன்கள்
ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்க்ஸில் முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தது. எனினும், அதன் பின் விக்கெட்கள் சரியத் துவங்கின. அந்த அணி 236 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து ஆடி வந்த போது வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.
இடியுடன் மழை
அப்போது மூன்றாம் நாளில் 16.3 ஓவர்கள் மீதம் இருந்தன. அம்பயர்களும், வீரர்களும் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய பின் இடியுடன், மழையும் பிடித்துக் கொண்டது. இதையடுத்து, மூன்றாம் நாள் போட்டியை அம்பயர்கள் முடித்துக் கொண்டதாக அறிவித்தனர்.
4 விக்கெட்கள் மீதமுள்ளன
ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இன்னிங்க்ஸில் இன்னும் 4 விக்கெட்கள் மீதமுள்ளன. இந்தியாவை விட 386 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்தியா ஆஸ்திரேலிய அணியை வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திட்டம் என்ன?
இந்திய அணி நான்காம் நாள் விரைவாக 4 விக்கெட்களை வீழ்த்தினால், ஆஸ்திரேலிய அணிக்கு ஃபாலோ-ஆன் கொடுக்க முடியும். அதன் பின் இந்திய அணிக்கு ஒன்றரை நாள் மீதமிருக்கும். அதற்குள் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாம் இன்னிங்க்ஸ்-ஐ முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
மழை குறுக்கிடாமல் இருக்கணும்
அதே சமயம், அடுத்த இரண்டு நாட்கள் மழை குறுக்கிடாமல் இருந்தால் மட்டுமே இந்தியா போட்டியை வெல்ல முடியும். ஆஸ்திரேலியா போட்டியை டிரா செய்ய முயற்சிக்கும் என்பதால் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்காமல் போகலாம். இந்தியா இந்த டெஸ்ட் டிரா ஆனாலும் கூட தொடரை 2-1 என கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
குல்தீப் அசத்தல்
முதல் இன்னிங்க்ஸில் குல்தீப் யாதவ் 3, ஜடேஜா 2, ஷமி 1 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் சுழற் பந்துவீச்சை சமாளித்து ஆடினாலும், பின்னர் தடுமாறினர். மழைக்கு பின்னர் ஆடுகளத்தின் தன்மை பேட்டிங்கிற்கு சாதகமாக மாறவும் வாய்ப்பு உண்டு.