அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 180 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணியை விடவும் 94 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருப்பதோடு, ஆஸ்திரேலியா அணியின் கைகளில் 9 விக்கெட்டுகள் இருக்கிறது.
இதனால் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் கைகளே ஓங்கி இருந்ததாக பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 3 தவறுகளை செய்துள்ளது. முதல் தவறு என்னவென்றால், டாஸ் வென்ற பின் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது தான். அடிலெய்டு மைதானத்தில் முதல் பேட்டிங் ஆடிய அணிகளே அதிகமுறை வென்றிருக்கின்றன.

இருந்தாலும் அடிலெய்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. இதனால் வானிலையும் மேகமூட்டமாக இருந்தது. இது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால், இந்திய அணி டாஸில் வேறு முடிவை எடுத்திருக்கலாம். அப்படி எடுத்திருந்தால், இந்திய பவுலர்களால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை விரைவாக விக்கெட் வீழ்த்தி இருக்க முடியும்.
ஏனென்றால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பெங்களூரிலும் டாஸ் வென்று பேட்டிங் செய்ததே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இம்முறை வரலாறு திரும்பாமல் இருக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். இந்திய அணி செய்த 2வது தவறு என்னவென்றால், பவுன்ஸ் பந்துகளுக்கு ஏற்ப தகவமைக்காமல் பேட்டிங் செய்தது தான்.
கேஎல் ராகுல், விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் காரணமாகவே விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு பக்கம் ஸ்டார்க் ஸ்விங் செய்ய, இன்னொரு பக்கம் கம்மின்ஸ் லைன் மற்றும் லெந்தில் கவனமாக இருக்க, இறுதியில் போலண்ட் சீமை பிடித்து ஹார்ட் லெந்தில் பவுலிங் செய்து கொண்டே இருந்தார். 3 வேகப்பந்துவீச்சாளர்களும் 3 விதமாக செயல்பட்டது பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலாக அமைந்தது.
பிட்சில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கும் போது கால் நகர்த்தலில் பேட்ஸ்மேன்கள் கவனமாக இருந்து செயல்பட்டிருந்தால், விக்கெட்டை காப்பாற்றி இருக்க முடியும். அதனை செய்யாமல் விக்கெட்டை பறிகொடுத்துள்ளனர். கடைசியாக இந்திய அணி பவுலர்கள் முதல் நாள் ஆட்டத்தில் சரியான லைன் மற்றும் லெந்தை கண்டறியாமலேயே இருந்தனர்.
அதேபோல் ஸ்டம்ப் லைனில் இருந்து விலகி அதிகமாக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பவுலிங் செய்தனர். பெர்த் டெஸ்ட் போட்டியில் 31 சதவிகித பந்துகள் ஸ்டம்ப் லைனிலும், 10.9 சதவிகித பந்துகள் ஆஃப் ஸ்டம்ப் வெளியிலும் வீசப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் 20.3 சதவிகித பந்துகள் மட்டும் ஸ்டம்ப் லைனிலும், 21.3 சதவிகித பந்துகள் ஆஃப் ஸ்டம்ப் வெளியிலும் வீசப்பட்டுள்ளது. இதனை நாளைய ஆட்டத்தில் இந்திய அணி பவுலர்கள் மாற்றிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.